புனித வெள்ளி – வார விடுமுறை… சொந்த ஊர் செல்லலாமா.. 2,257 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Special Buses: தமிழகத்தில் புனித வெள்ளி மற்றும் வாரவிடுமுறை நாள்களையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,257 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.

தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் ஏப்ரல் 3- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாள் அரசு விடுமுறை தினமாகும். இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைகளாகும். இதனால், தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். அதன் படி, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புனித வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,257 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு நாளை ஏப்ரல் 2-ஆம் தேதி ( வியாழக்கிழமை) 575 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம்- கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்
இதே போல, ஏப்ரல் 3- ஆம் தேதி மற்றும் 4- ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து 395 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூர், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை வியாழக்கிழமை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 90 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வேட்பாளரின் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா.. வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த நபர்.. பின்னால் வந்த சிக்கல்!
சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு 735 பேருந்துகள்
இதே போல, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை ஏப்ரல் 4- ஆம் தேதி வரை 24 சிறப்பு பேருந்துகளும் திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தவிர, ஏப்ரல் 5-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை, பெங்களூர் உள்ளி வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை 735 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கம்
இந்த பேருந்துகள் அனைத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!