அண்ணா பல்கலை.மாணவர்கள் கவனத்துக்கு… மதிப்பெண் முறையில் புதிய மாற்றம்!
Anna University New Grading System: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இன்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் முறையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமை, தரம் அவர்களை சென்றடையும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கிரேடு மதிப்பெண் முறை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் புதிய கிரேடு மதிப்பெண் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில், வருகிற 2026-2027 கல்வி ஆண்டு முதல் ரிலேட்டிங் கிரேடிங் முறையில் இருந்து அப்சலூட் கிரேடிங் முறைக்கு மாறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்ஜினியரிங் மாணவர்கள் ஒட்டுமொத்த செயல் திறனுக்கு பதிலாக அவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதில், அண்ணா பல்கலைக்கழக கவுன்சில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், இன்ஜினியரிங் மாணவர்கள் அவுட்ஸ்டாண்ட் முதல் மீண்டும் தேர்வு எழுதுதல் வரை சுமார் 8 புள்ளி தர முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 8 புள்ளி முறை அமல்
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் 8 புள்ளி முறை நடைமுறைக்கு வர உள்ளது. இதில், அவுட்ஸ்டாண்டிங் 10 (91-100) மிகச்சிறப்பு 9 (81-30) மிக நன்று 8 (71-80) நன்று 7 (66-70) சராசரிக்கு மேல் 6.5 (61-65), சராசரி 6 (56-60) திருப்திகரமான சாதனை 5 (50-55) மீண்டும் தேர்வு எழுதுதல் 0 (50-க்கும் கீழ்) என்ற முறையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும், 91 முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கும் மாணவர்களுக்கு எஸ் கிரேடு வழங்கப்படும். இந்த மதிப்பெண்ணானது மாணவர்களின் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை குறிக்கும் வகையில் இருக்கும்.
சுயாட்சி கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும்
கடந்த 2025 ஆம் ஆண்டின் விதிமுறைகளின் கீழ், தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, சுயாட்சி கல்லூரிகளும் இதை பின்பற்றுமாறு பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது உள்ள நடைமுறையில், இன்ஜினியரிங் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில் சில மாணவர்களுக்கு உரிய கிரேடு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறையில், ஒரு இன்ஜினியரிங் மாணவர் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு இணையான தரம் நேரடியாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக
தற்போது, ஒரு தேர்வை எழுதும் மாணவர்களின் செயல் திறனில் பெரிய அளவில் மாற்றங்கள் இருந்து வருகின்றன. இதனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அப்சலூட் கிரேடிங் முறை இன்ஜினியரிங் மாணவர்களின் உண்மையான திறனை மிக துல்லியமாக எடுத்துக் காண்பிக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் இன்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் தனிப்பட்ட திறனை துல்லியமாக மதிப்பீடு செய்யவும் இத்தகைய முக்கிய முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?