விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்? முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய நடிகை கவுதமி..
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தவர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
மார்ச் 16, 2026: பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தமிழ்நாடு முதலமைச்சர் பார்க்கிறார் என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது இரவோடு இரவாக 41 பேருக்கு பிரேத பரிசோதனை செய்த தமிழக அரசு, விளாத்திகுளத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை விஷயத்தில் ஏன் மெத்தனம் காட்டுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை மாத காலமே இருக்கக்கூடிய நிலையில், அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை கௌதமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – நடிகை கவுதமி:
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தவர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். ஆனால் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சி முடிவடையும் தருவாயில் தான் அதை வழங்கியுள்ளார். அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தற்போது இதனை வழங்குகிறார். எல்லாவற்றையும் வாக்குக்காக மட்டுமே அவர் செய்கிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்?
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் தான் முதலமைச்சருக்கு எல்லா திட்டங்களும் நினைவுக்கு வருகிறது என்றார். அதனால் தான் தற்போது பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி, 5000, 2000 என மக்களுக்கு வழங்கி வருகிறார் என்றும் விமர்சித்தார்.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் – விஜய் கோரிக்கை – காரணம் என்ன?
விளாத்திகுளம் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதையும் கூற முடியும் என எம்.பி. கனிமொழி தெரிவித்தது மனிதத்தன்மையற்றதாகும். பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற கூட முடியாத நீங்கள் எப்படி உங்களை தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக 41 பேருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் விளாத்திகுளம் மாணவி சம்பவத்தில் ஏன் இவ்வளவு தாமதம் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக – திமுக தான் போட்டி:
எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்சிக் காலத்தில் எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்த தலைமுறையும் அடுத்த இரண்டு தலைமுறைகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்றார்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து.. பைக் மீது மோதியதில் இருவர் பரிதாப பலி.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்!
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே இருக்கும். புதிதாக உருவாகியுள்ள கட்சிகள் இடையில் வரக்கூடிய தொந்தரவாக மட்டுமே இருக்கும்; அவர்கள் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.