பொதுமக்களுக்கு சூப்பர் நியூஸ்.. சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே? முழு விவரம்..
Water ATM: சென்னையில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 40 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் முடிவுக்கு வந்த நிலையில் மேலும் 10 இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது.
இந்த தீர்வு கானும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்து வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
1 மணி நேரத்திற்கு 250 பேருக்கு குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு அதனை சுத்திகரித்து ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 40 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதம் 10 இடங்களில் விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு மிகவும் அவசியமானது என்றால் சுத்தமான குடிநீர் தான். பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தாலும் பொது இடங்களில் கூடும் பொழுது குடிநீர் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பலருக்கும் குடிநீர் கிடைக்காமல் போகிறது. அனைத்து தரப்பு மக்களும் சுத்தமான குடிநீர் பருக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கோடை காலம் என்பதாலும் பொது இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம் நடைமுறைக்கு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான குடிநீர் ஏடிஎம்கள் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த 50 குடிநீர் ஏடிஎம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து மேலும் பல இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.