Rishabh Pant’s Form: தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரிஷப் பண்ட்.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சவுரவ் கங்குலி!

India vs England Test Series 2025: இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவரது பேட்டிங் பாணியை விமர்சித்துள்ளார். கங்குலி, பண்ட் அதிக ரிஸ்க் எடுக்கும் விதத்தை குறைத்து, பந்தைப் பொறுத்து விளையாடுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வரும் டெஸ்ட் தொடருக்கு முன்னர், பண்ட் தனது பேட்டிங் திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது.

Rishabh Pants Form: தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரிஷப் பண்ட்.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சவுரவ் கங்குலி!

ரிஷப் பண்ட் - சவுரவ் கங்குலி

Published: 

12 Jun 2025 08:00 AM

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி (India vs England Test Series) கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய அணி வீரர்கள் ஸ்டேடியத்தில் வியர்க்க வியர்க்க பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தவறான ஷாட்களை ஆடி அவுட்டான ரிஷப் பண்டுக்கு, தற்போது முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) அறிவுரை வழங்கியுள்ளார்.

சவுரவ் கங்குலி அறிவுரை:

ரெவ் ஸ்போர்ட்ஸுடனான உரையாடலில் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்தின் ஷாட் தேர்வு தனக்குப் பிடிக்கவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவில் பண்ட் காட்டிய ஆட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் வித்தியாசமாக அதிக ஷாட்களை விளையாட முயன்றார். ஒவ்வொரு பந்திலும் பண்ட், பேட்டை சுற்றிகொண்டே இருந்தார். ஆஸ்திரேலிய போன்ற மண்ணில் பந்து நகரும் சூழ்நிலையில் விளையாட இது ஒரு நல்ல வழி அல்ல. அவர் போராட வேண்டியிருக்கும். எனவே, பந்துக்கு ஏற்ப பேட்டிங்கில் கவனமாக ஆடுவது மிக மிக முக்கியம்” என்று தெரிவித்தார்.

ரிஷப் பண்ட் சொதப்பல்:

2024 ஆம் ஆண்டில் ரிஷப் பண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சராசரியில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் உள்பட 576 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில், பண்ட் 10 இன்னிங்ஸ்களில் 255 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த 10 இன்னிங்ஸ்களில் பந்த் ஒரு அரைசதம் மட்டுமே அதிகபட்சமாக எடுத்தார். மோசமான ஷாட்களை விளையாடியதால், 10ல் 8 முறை கேட்ச் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்டின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை:

ரிஷப் பண்ட் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 42.11 சராசரியுடன் 2948 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப்பின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 159* ரன்கள் ஆகும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ரிஷப் 12 டெஸ்ட் போட்டிகளில் 781 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 39 க்கும் அதிகமாகவும், ஸ்ட்ரைக் ரேட் 74.45 ஆகவும் உள்ளது. அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.