ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம் – என்ன காரணம் தெரியுமா?
Starc Withdraws from IPL : டெல்லி கேப்பிடல்ஸை சேர்ந்த நட்சத்திர வீரரான மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் 2025 சீசனில் தொடரப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் விதிகளின் படி அவர் ரூ.3.5 கோடிகளை இழக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஜபிஎல் (IPL) 2025ல் கடந்த மே 8, 2025 அன்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த போட்டி திடீரென நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட நிலையில் எல்லையில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2025 மே 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்களில் ஒரு சிலர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், மீதமுள்ள போட்டிகளில் விளையாட இந்தியா திரும்பப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகும் முடிவை ஸ்டார்க் தனது உரிமையாளரான டெல்லி கேபிடல்ஸிடம் தெரிவித்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ரூ. 3.5 கோடி அபராதம்
இந்த முடிவிற்காக ஸ்டார்க் 400,000 டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 3.5 கோடி ரூபாயை இழக்க நேரிடும். கோட் ஸ்போர்ட்ஸின் வெளியான கட்டுரையின் படி, ஐபிஎல் விதிகளில் ஒரு வீரர் சீசனின் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றால், அந்த அணிக்கு வீரர்களின் சம்பளத்தைக் குறைக்க அதிகாரம் உள்ளது. இந்த விதியின் கீழ், இந்தப் பணம் மிட்செல் ஸ்டார்க்கின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும். ஐபிஎல் 2025 ஏலத்திற்கு மிட்செல் ஸ்டார்க்கை வாங்க மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் போட்டிபோட்டன. ஆனால் இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் ரூ.11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இப்போது ஸ்டார்க் இந்தத் தொகையிலிருந்து ரூ.3.5 கோடியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 2025 ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10.16 என்ற எகானமி ரேட்டில் ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுபோன்ற சூழ்நிலையில், ஸ்டார்க் இல்லாதது டெல்லி அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அந்த தற்போது பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் ஸ்டார்க இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைப் போல டுஃபெளிஸிஸும் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகும் வீரர்கள்
பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் லாக்கி பெர்குசன், டெல்லி கேப்பிடல்ஸை சேர்ந்த ஜேக் பிரேசர்-மெக்கர்க், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த மயங்க் ஆதவ் போன்ற வீரர்களும் பங்கேற்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அதிக வீரர்கள் விலகுவதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு மாற்றாக விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.