T20 World Cup: ஐசியூ-வில் தந்தை.. இந்திய அணியிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Indian Star Leaves T20 World Cup Camp: அந்தவகையில், நேற்றைய தினம் (பிப்.24) நடைபெற்ற பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் காணப்பட்டனர், ஆனால் ரிங்கு சிங் மைதானத்தில் இல்லை.

டி20 உலக கோப்பை முகாமிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) முகாமில் இருந்து அவர் அவசரமாக வீடு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிங்குவின் தந்தை 4-ம் நிலை (Stage-4) கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (Ventilator) அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக ரிங்கு சிங் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதையும் படிக்க: T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் இமாலய வெற்றி.. இந்தியாவுக்கு உருவான புதிய சவால்..
அணியில் மீண்டும் இணைவாரா ரிங்கு?
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ரிங்கு இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அவர் மீண்டும் அணியுடன் இணைவாரா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. ஏற்கெனவே, ‘சூப்பர் 8’ல் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அப்படியிருக்க, ரிங்கு சிங்குக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலை அணி நிர்வாகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அணியில் ரிங்கு சிங் முக்கிய அங்கம்:
சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக இக்கட்டான நேரங்களில் அதிரடியாக விளையாடி போட்டியை முடித்து வைக்கும் திறனுக்காக (Finisher), அணியில் ரிங்கு சிங் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளார். அவர் நீண்ட காலம் அணியில் இல்லாதது, தொடரின் அடுத்தடுத்த கட்டங்களில் இந்திய அணியின் சமநிலையைப் பாதிக்கக்கூடும். இதனால், தற்போது அனைவரது கவனமும் அவரது குடும்பச் சூழல் மீதே உள்ளது. இந்த கடினமான நேரத்தில் கிரிக்கெட் உலகம் அவருக்குப் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணி நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
பயிற்சியிலும் ரிங்கு இல்லை:
அந்தவகையில், நேற்றைய தினம் (பிப்.24) நடைபெற்ற பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் காணப்பட்டனர், ஆனால் ரிங்கு சிங் மைதானத்தில் இல்லை. இந்த உலகக்கோப்பையில் இதுவரை ரிங்குவின் பேட்டிங் சராசரியாகவே இருந்துள்ளது. பெரும்பாலும் ஆட்டத்தின் கடைசி சில பந்துகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் அவர் களம் இறங்க வேண்டியிருந்தது. ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் (அதில் இரண்டு முறை ஆட்டமிழக்கவில்லை; அதிகபட்ச ரன்கள் 11*). இந்த ஆண்டில் விளையாடிய 10 டி20 போட்டிகளில், 8 இன்னிங்ஸ்களில் 115 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 28.75 மற்றும் ஸ்டிரைக் ரேட் 132.18 ஆகும்.
இதையும் படிக்க: India vs Zimbabwe T20 WC: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் ‘பிளேயிங் 11’.. கவாஸ்கர் கொடுத்த ஐடியா!!
‘வாழ்வா – சாவா’ கட்டத்தில் இந்தியா:
‘சூப்பர் 8’ சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி நாளை (பிப்.26) சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிராக ‘வாழ்வா-சாவா’ (Must-win) போட்டியில் விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுடன், தென்னாப்பிரிக்கா அணி ‘சூப்பர் 8’ சுற்றில் தோல்வியடையாமல் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.