டெல்லி சுவாமிநாராயன் அக்ஷர்தாமில் 108 அடி நீலகண்ட வர்ணி சிலை பிரதிஷ்டை.. சிறப்புகள் என்ன?
மார்ச் 25ஆம் தேதி காலை, அக்ஷர்தாம் வளாகத்தில் “ஸ்ரீ நீலகண்ட வர்ணி உலக அமைதி மகாயக்ஞம்” வேத முறையில் தொடங்கப்பட்டது. BAPS அமைப்பின் ஆன்மீக குருவான மகாந்த் ஸ்வாமி மகாராஜ், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் நீங்கி, உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென பிரார்த்தனை செய்தார். அமைதியின் அடையாளமாக வெள்ளை புறாக்களை வானில் பறக்கவிட்டார்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, மார்ச் 25, 2026: டெல்லியில் உள்ள Swaminarayan Akshardham வளாகத்தில் நாளை (மார்ச் 26) ஒரு அற்புதமான வரலாற்றுச் சம்பவம் நடைபெற உள்ளது. உலகிலேயே மிக உயரமான, ஒரே காலில் நிற்கும் பகவான் ஸ்வாமிநாராயணர் (நீலகண்ட வர்ணி) சிலையை மஹந்த் சுவாமி மகாராஜ் அவர்கள் பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த வரலாற்று நிகழ்வின் முழு விவரங்களை பார்க்கலாம்.
அக்ஷர்தாமில் எழுந்திருக்கும் 108 அடி ‘நீலகண்ட வர்ணி’ தபோமூர்த்தி:
இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் டெல்லி ஸ்வாமிநாராயண அக்ஷர்தாம், இன்னொரு உலக சாதனைக்கு தயாராகியுள்ளது. கடுமையான தவத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒரே காலில் நிற்கும் 108 அடி உயரமான ‘நீலகண்ட வர்ணி’ சிலை மார்ச் 26ஆம் தேதி மிக விமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
நீலகண்ட வர்ணி யார்?
11 வயதிலேயே பகவான் ஸ்வாமிநாராயணர் தனது இல்லத்தை விட்டு, மனிதகுல நலனுக்காக இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். ஏழு ஆண்டுகளில் சுமார் 12,000 கிலோமீட்டர் பயணம் செய்து, இமயமலை, பத்ரிநாத், கேதார்நாத், நேபாளத்தின் முக்திநாத், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல புனித தலங்களை தரிசித்தார். அந்த காலத்தில் அவர் “நீலகண்ட வர்ணி” என அழைக்கப்பட்டார்.
நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் உள்ள புலஹாஸ்ரமத்தில், உணவும் தண்ணீரும் இன்றி நான்கு மாதங்கள் ஒரே காலில் நின்று அவர் செய்த கடுமையான தவத்தை நினைவுகூரும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சிலையின் சிறப்பம்சங்கள்
• 108 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 8 அடி மேடையில் நிறுவப்பட்டுள்ளது. ஒரே காலில் நிற்கும் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இது இருக்கலாம்.
• ஐந்து உலோகங்களின் கலவையான ‘பஞ்சதாது’ (முக்கியமாக வெண்கலம்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
• அக்ஷர்தாம் சாது சிற்பிகள், சுமார் 50 கலைஞர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வருட காலம் உழைத்து இதை வடிவமைத்துள்ளனர்.
• தியாகம், கட்டுப்பாடு, கருணை, மனித சேவை மற்றும் உலக அமைதி போன்ற உயர்ந்த மதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
உலகம் முழுவதும் இருந்து வருகை:
இந்த நிகழ்விற்காக அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சுவாமிகள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் டெல்லி வந்துள்ளனர். லண்டன், நியூயார்க், துபாய், சிட்னி, ஹாங்காங் போன்ற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
உலக அமைதிக்கான பிரார்த்தனை
மார்ச் 25ஆம் தேதி காலை, அக்ஷர்தாம் வளாகத்தில் “ஸ்ரீ நீலகண்ட வர்ணி உலக அமைதி மகாயக்ஞம்” வேத முறையில் தொடங்கப்பட்டது. BAPS அமைப்பின் ஆன்மீக குருவான மகாந்த் ஸ்வாமி மகாராஜ், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் நீங்கி, உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென பிரார்த்தனை செய்தார். அமைதியின் அடையாளமாக வெள்ளை புறாக்களை வானில் பறக்கவிட்டார்.
முக்கிய நிகழ்ச்சிகள்
• மார்ச் 26 காலை 6:00 மணிக்கு முக்கிய பிரதிஷ்டை பூஜைகள் தொடங்கும்.
• அதன் பின்னர் பக்தர்கள் தரிசிக்க சிலை திறந்து வைக்கப்படும்.
இந்த சிலை வெறும் சுற்றுலா ஈர்ப்பாக மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறைகளுக்கு ஒழுக்கம், பக்தி மற்றும் ஆன்மீக வாழ்க்கையை வழிநடத்தும் ஒரு பெரும் சிந்தனை மையமாக அமையும்.