Tiruchendur: 21 பேர் உயிர்.. திருச்செந்தூர் கோயில் கொடிமரம் உருவான கதை!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோவிலின் கொடிமரம் சந்தன மரத்தால் ஆனது. கொடிமரம் அமைக்கச் சென்ற 21 பேர் கொண்ட குழு, காக்காச்சி மலையில் 21 தேவதைகளைக் கொண்ட சந்தன மரத்தைக் கண்டனர். அம்மரத்தை வெட்டும் போது பல சவால்களை சந்தித்தனர். சொரிமுத்து அய்யனாரின் தலையீட்டால் மட்டுமே கொடிமரம் திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Tiruchendur: 21 பேர் உயிர்.. திருச்செந்தூர் கோயில் கொடிமரம் உருவான கதை!

திருச்செந்தூர் கொடிமரம்

Updated On: 

25 Jun 2025 11:13 AM

ஆன்மீக அன்பர்கள் மத்தியில் திருச்செந்தூர் முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக திகழ்கிறது. தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடாக அறியப்படும் திருச்செந்தூரில் 2025 ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருச்செந்தூர் கோவில் பற்றி பல்வேறு சிறப்பு தகவல்களை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று திருச்செந்தூர் கொடிமரம் உருவான கதை பற்றி காணலாம். பொதுவாக ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால் அதில் கொடிமரம் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கொடி மரம் முக்கியத்துவம்

தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கொடிமரப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு திருவிழாவாக இருந்தாலும் கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து தான் தொடங்கும். கருவறையில் மூலவருக்கு நேர் எதிர் திசையில் அமைந்திருக்கும் இந்த கொடி மரத்தின் அடியில் தான் பக்தர்கள் விழுந்து வணங்குவார்கள். அப்படியான கொடிமரம் திருச்செந்தூரில் சந்தன மரத்தால் செய்யப்பட்டது. அதன் வரலாறு குறித்து அறிந்து கொள்வோம்.

திருச்செந்தூர் கொடிமரம் உருவான கதை

முன்பொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மாசி திருவிழா அங்கு கொடிமரம் இல்லாத காரணத்தால் நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் கூடி புதிய கொடிமரம் வைக்க முடிவெடுத்தனர். ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையிலான 21 பேர் கொண்ட குழுவானது காக்காச்சி மலைக்கு கொடிமரம் வெட்ட சென்றனர். செல்லும் வழியில் மந்தை அருகே இருக்கும் ஒரு அம்மன் கோயிலில் வேண்டாம் முடிவெடுத்தனர். அம்மன் கோயில் கருவறைக்குள் ஆறுமுகம் ஆசாரி மற்றும் நுழைந்து வணங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்ததைக் கண்டு திடுக்கிட்டார். என்ன காரணம் எனக் கேட்டபோது கொடிமரம் வெட்ட நினைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் இந்தப் பணியில் ஈடுபடும் நபர்களில் உன்னைத் தவிர மற்ற யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என அம்மன் தெரிவித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை யாரிடமும் கூறக்கூடாது என அம்மன் சொன்னதால் செய்வதறியாது திகைத்த ஆறுமுகம் ஆசாரி களக்காடு அருகே வசித்து வந்த மந்திரம் அறிந்த சின்னத்தம்பி மரக்காயரிடம் விஷயத்தை கூறினார். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் மரக்காயர் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். ஆனால் சின்னத்தம்பி மரக்காயரின் மனைவி தனக்கு இரு தினங்களுக்கு முன்பு கெட்ட கனவு வந்ததாகவும் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் எச்சரித்தாள்.

சந்தன மரத்தில் இருந்த 21 தேவதைகள்

ஆனால் அதையும் மீறி அவர் பயணப்பட்டார். தொடர்ந்து 21 மாட்டு வண்டிகளில் கொடி மரம் வெட்ட சென்றனர். களக்காடு மலைக்கு சென்ற அவர்கள் எங்கு தேடியும் கொடிமரத்திற்கு தேவையான மரம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை உச்சிக்கு சென்றடைந்தனர். அங்கு நல்ல உயரமான சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏற்றது என ஆறுமுகம் ஆசாரி கூறி சின்னத்தம்பி மரக்காயரிடம் இந்த மரத்தைப் பற்றிய விஷயங்களை கேட்கிறார்.

அதன்படி மை போட்டு மாந்திரீகம் பார்த்த சின்ன தம்பிக்கு அந்த  மரத்தின் அடிபாகத்தில் சுடலை மாடனும், மேல்முனையில் சங்கடகரகாரனும் உட்பட 21 தேவதைகள் இருப்பது தெரிந்தது. அவற்றையெல்லாம் விரட்டி விட்டு கொடி மரத்தினை வெட்ட வேண்டும் என்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். கோடாரிகளைக் கொண்டு 20 பேர் மரத்தை வெட்ட சென்ற நிலையில் மரம் கோடாரியை திருப்பி வந்தவர்களை வெட்டி சாய்த்தது.

இதனால் பதறிப்போன ஆறுமுகம் ஆசாரி நேரடியாக மந்திரவாதி சின்னத்தம்பி மரக்காயரை நோக்கி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் அவரும் இறந்து விட்டார். இதனை எடுத்து 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு இறங்கி ஆறுமுகம் ஆசாரியை விரட்டியது. கிறுக்கு பயந்த அவர் பொதிகை மலைக்கு வந்தடைந்து அங்கிருந்து கீழே நோக்கி ஓட ஆரம்பித்தார்.

கட்டளையிட்ட சொரிமுத்து அய்யனார்

இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு வந்து அய்யனார் காலை பற்றி தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சொரிமுத்து அய்யனார் 21 மாட தேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்து திருச்செந்தூர் கோயிலுக்குத்தானே கொடிமரம் செல்கிறது.. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்? என கேட்டார். எனவே நீங்கள் அந்த சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூரில் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அந்த 21 மாட தேவதைகளும் 21 மாட்டு வண்டிகளில் சந்தன மரத்தை வெட்டி ஒன்றாக கட்டினர். அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதும் மாசி திருவிழா நடைபெறும் போதெல்லாம் சுடலை மாடனுக்கு ஆடு வெட்டியும் சங்கடகரகாரனுக்கு படையலிட்டும்தான் மற்ற பணிகளை தொடங்குவார்கள். அதேபோல் தேர் ஓடும்போது சங்கடகரகாரன் அதன் மீது ஏறி போகலாம் என்று கூறியவுடன் தான் தேர் நகரும் ஐதீகமும் உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)