AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பலன்களை அள்ளித் தரும் பள்ளியறை பூஜை.. வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?

பள்ளியறை பூஜை என்பது இரவு நேரத்தில் கோயில்களில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாடாகும். இது சிவன் மற்றும் அம்பாள் ஐக்கியமாவதை குறிக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்பதால் குடும்ப ஒற்றுமை, திருமணம், வேலைவாய்ப்பு, நோய் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பலன்களை அள்ளித் தரும் பள்ளியறை பூஜை.. வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?
பள்ளியறை பூஜை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 23 May 2025 11:45 AM IST

பொதுவாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அதிகாலை நடை திறப்பு தொடங்கி இரவு நடை சாத்தப்படும் வரை பல்வேறு வகையான கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு கால பூஜையிலும் ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபடுகிறார்கள். அப்படியாக அனைத்து கோயில்களிலும் இரவு நடை அடைக்கப்படுவதற்கு முன் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். அதாவது காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுவாமி மற்றும் அம்பாளை இரவு நேரத்தில் படுக்கறையில் (பள்ளியறை) அமர வைத்து அவரை தாலாட்டு பாடி வழிபடும் ஒரு நடைமுறையாகும். இது கோயில்களில் இரவு 8.45 மணி தொடங்கி 9 மணிக்குள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பள்ளியறை பூஜை சிவன் கோயில்களில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

பள்ளியறை பூஜையால் கிடைக்கும் பலன்கள்

இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக பிரிந்த வாழ்க்கை துணை மீண்டும் ஒன்று சேரவும், காணாமல் போன கணவன் அல்லது மனைவி மீண்டும் திரும்பி வரவும் பள்ளியறை பூஜையில் பங்கேற்றி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க, விரைவில் திருமண வரன் அமைய, நீண்ட காலமாக இருக்கும் பிணிகள் தீர, கல்வியில் வளர்ச்சி பெற, வியாபாரத்தில் செழித்து வளர, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து நிம்மதி க்கான என பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளானோர் இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் நிச்சயம் மன மகிழ்ச்சியும், வாழ்க்கையில் வளர்ச்சியும் உண்டாகும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

சிவன் கோயில்களில் விசேஷம்

சிவன் கோயில்களில் ஏன் பள்ளியறை பூஜை விசேஷமானது என சொல்லப்படுகிறது என்றால் சுவாமி தனது சன்னதியில் இருந்து கிளம்பி அம்பாள் சன்னதியில் எழுந்தருள்வார். பின்னர் இருவரும் சிவ சக்தியாக ஐக்கியமாவார்கள். அந்த இடம்தான் பள்ளியறையாக கருதப்படுகிறது. சுவாமியை அவருடைய சன்னதியில் வைத்து அலங்காரம் செய்து பல்வேறு விதமான வாத்தியங்கள் முழங்க பணியாளர்கள் பல்லக்கில் அவரை தூக்கிச் செல்வார்கள். அதன் பின்னால் பக்தர்கள் சிவ  நாமங்கள், மந்திரங்கள், பாடல்களை பாடி செல்வார்கள்.

அங்கு அம்பாள் சிவனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து பள்ளியறைக்குள் அழைத்து செல்வாள். மேலும் பால், பழம்  ஆகியவை நைவேத்தியமாக வைக்கப்படும். பின் சுவாமி, அம்பாள் வீற்றிருக்க ஊஞ்சல் சேவை நடத்தப்படும். பின்னர் பாசுரங்கள் பாடி பள்ளியறை கதவானது மூடப்படும். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடைபெறும் இந்த பூஜையில் பலரும் கலந்து கொள்வார்கள்.

இதனைக் கொடுத்தால் ஏராளமான நன்மைகள்

பள்ளியறை பூஜையில் பால் நைவேத்தியமாக கொடுக்கலாம். சுத்தமான பசும்பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதில் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து கொண்டு வந்து கொடுப்பார்கள். இவ்வாறு செய்பவர்களின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் யாவும் நல்ல அறிவுடன் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் குழந்தை இல்லாதவர்கள் வழங்கினால் விரைந்து அவருக்கு நல்ல செய்தி வந்து சேரும் எனவும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளியறை பூஜைக்கு மலர்கள் கொண்டு வந்து கொடுத்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும், சுவாமியை பல்லக்கில் சுமந்து கொண்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வமும் கிடைக்கும். மேலும் இந்த பிறவி மட்டுமின்றி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவர்கள் செல்வந்தர்களாகவே திகழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

Follow Us