ம.பியில் அணைக்கட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபம்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..
5 People from Tamil Nadu Lose Their Lives: பாதுகாப்பு உடைகள் அனைத்தும் ஊழியர்களால் ஒரு மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், இக்கட்டான நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. கரையில் இருந்தவர்கள் ஆபத்தை உணர்ந்து சத்தமிட்டு எச்சரித்தும், படகோட்டி அதை அலட்சியப்படுத்தியதே விபத்திற்கு முக்கியக் காரணம்.

உயிரிழந்த தமிழர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பார்கி அணைக்கட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காகப் படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், (ஏப்.30) சுமார் 40 சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு தனியார் படகு அணையின் உட்பகுதியில் சவாரி சென்று கொண்டிருந்தது. படகு அணையின் மையப்பகுதியை எட்டியபோது, எதிர்பாராத விதமாகத் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகிலிருந்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளை மீட்கும் பணியில் இறங்கினர். இருப்பினும், சிறிது நேரத்திலேயே படகு முழுவதுமாக நீரில் மூழ்கியது.
இதையும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. காதல் ஜோடியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்.. இளம்பெண்ணின் துணிச்சலால் கைது..
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு:
விபத்து நடந்த முதல் நாளில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாகத் தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 9 ஆக உயர்ந்தது. குறிப்பாக, ஒரு தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தவாறே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது மீட்புப் பணியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுவரை மொத்தம் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகக் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்:
இந்தக் கொடிய விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த காமராஜ் (38) என்பவர் மத்தியப் பிரதேசத்திலுள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது மனைவி காந்தரூபா (38), மகன்கள் புவித்தரன் (11), தமிழ்சேந்தன் (5) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த மைத்துனர் வேந்தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தார். படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி, இளைய மகன் தமிழ்சேந்தன் மற்றும் வேந்தனின் மனைவி சவுபாக்யவதி, அவரது மகன் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலட்சியமே விபத்திற்கு காரணம்:
இந்த விபத்தில் உயிர் தப்பிய டெல்லியைச் சேர்ந்த சங்கீதா கோரி என்பவர் அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பயங்கரமான காற்று வீசியதால் படகு நிலைகுலைந்த பிறகே பயணிகள் உயிர் பாதுகாப்பு உடைகளை (Life Jackets) தேடினர். பாதுகாப்பு உடைகள் அனைத்தும் ஊழியர்களால் ஒரு மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், இக்கட்டான நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. கரையில் இருந்தவர்கள் ஆபத்தை உணர்ந்து சத்தமிட்டு எச்சரித்தும், படகோட்டி அதை அலட்சியப்படுத்தியதே விபத்திற்கு முக்கியக் காரணம்.
இதையும் படிக்க: வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
உயிர் சேதத்தை தவிர்த்திருக்கலாம்:
முன்னெச்சரிக்கையுடன் படகை கரைக்குத் திருப்பியிருந்தால் இந்த உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம் என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும், நிர்வாகத்தின் அலட்சியமுமே இந்தத் துயரமான சம்பவத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.