அமைதியான சமூகத்தை உருவாக்க யோகா மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி..

International Yoga Day: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, லட்சக்கணக்கான மக்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார், அதோடு யோகாவின் முக்கியத்துவத்தை குறித்து மக்களிடையே எடுத்துரைத்து, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அமைதியான சமூகத்தை உருவாக்க யோகா மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி..

யோகா பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி

Published: 

21 Jun 2025 07:54 AM

சர்வதேச யோகா தினம்: சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி யோகாவின் நன்மைகளையும் பெருமைகளையும் எடுத்து கூறி அதனை சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவாளித்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச யோகா தினமானது ஜூன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் யோகாவின் முக்கியத்துவம், யோகா செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

2025 ஆம் ஆண்டு யோகா நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்தி கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஆந்திரா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய ஆர்.கே கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் நடை பாதை இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

உலகளவில் யோகாவின் வளர்ச்சி அசாதாரணமானது – பிரதமர் மோடி:

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். யோகா மூலம் முழு உலகமும் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி:


முன்னதாக விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியை மேற்கொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ” கடந்த 10 ஆண்டுகளில் யோகாவின் உலகளாவிய பயணம் என்பது மிகவும் அசாதாரணமானது. மிக குறுகிய காலத்திலேயே 175 நாடுகள் இந்தியாவுடன் பக்கபலமாக நின்றது. இன்றைய உலகில் இத்தகைய ஒற்றுமையும் ஆதரவும் உண்மையிலேயே அசாதாரணமானது” என குறிப்பிட்டுள்ளார்.

உலக அமைதியை கடைபிடிக்க யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்:


தொடர்ந்து நிகழ்ச்சிகள் பேசிய பிரதமர் மோடி, “ சர்வே பவன்தூ சுக்கினா என்ற பழங்கால சமஸ்கிருத பழமொழியை பயன்படுத்தி அமைதியான சமூகத்தை உருவாக்க இந்த தத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அமைதியின்மை குறித்து கவலை அளிக்கிறது.

இன்று முழு உலகமும் ஏதோ ஒரு பதற்றத்தை சந்தித்து வருகிறது. பல பகுதிகளில் அமைதியின்மை மற்றும் உறுதியற்றதன்மை அதிகரித்து வருகிறது. இது போன்ற காலங்களில் யோகா நமக்கு அமைதியின் முக்கியத்துவத்தை தருகிறது. யோகா என்பது மனிதகுலம் சுவாசிக்கவும், சமநிலைப்படுத்தவும் மீண்டும் முழுமை அடையவும் தேவையான இடைவெளியை தருகிறது

சமநிலையை மீட்டெடுக்க தேவையான இடைவேளைக்கு யோகா வழி வகுக்கிறது. இன்று யோகாவின் வளர்ச்சியை கண்டு நான் பெருமை அடைகிறேன். பிரெய்லி முறையில் யோக சாஸ்திரங்கள் படிப்பது விஞ்ஞானிகள் விண்வெளியில் யோகா பயிற்சி மேற்கொள்வது, யோகா ஒலிம்பியெட்டில் இளைஞர்கள் பங்கேற்பது என அனைத்திலும் யோகா வளர்ந்து வருகிறது. யோகா எல்லைகள் தாண்டி அனைவருக்குமானது” என தெரிவித்துள்ளார்