ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு!

Operation Sindoor is Going On | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ள நிலையில், எல்லைகளில் அமைதி நிலவும் நிலையில் இந்திய விமானப்படை இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 May 2025 14:36 PM

சென்னை, மே 11 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தொடர்வதாக இந்திய விமானப்படை (IAF – Indian Air Force) தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நேற்று ( மே 10, 2025) போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று ( மே 11, 2025) காலை முதல் எந்த வித தாக்குதல்களும் இன்றி எல்லை பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், இந்திய விமானப்படை இந்த முக்கிய தகவகை வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான தகவல்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உப்டட மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பஹல்காம் தாக்குதலால் கடும் கோபத்திற்கு உள்ளான இந்தியா, பாகிஸ்தான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.

இந்த அரசின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று ( மே 10, 2025) மாலை இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதில் மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்துவதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால், ஒப்பதம் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

இந்திய விமானப்படையின் அறிவிப்பு

இந்த நிலையில், இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் செய்து முடித்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. இது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.