இந்தியாவில் நக்சல் இயக்கங்களின் காலம் முடிந்தது – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
India Ends Naxalism : இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த நக்சல் இயக்கத்தின் செயல்பாடுகள் காலம் முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு மார்ச் 31, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு பின்னால் உள்ள காரணத்தையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த நக்சல் இயக்கத்தின் செயல்பாடுகள் காலம் முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு மார்ச் 31, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் உள்ளிட்ட பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலவிய இந்த பிரச்னைக்கு முடிவு வந்ததற்கு காரணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அந்த பகுதிகளில் கல்வி, மருத்துவம் என வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் நக்சல் இயக்கங்களின் காலம் முடிந்தது
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து, நக்சல் பிரச்னைகள் வெறும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், வளர்ச்சியின்மை காரணமாக உருவான ஒரு சமூக பிரச்னையாகக் கருதி மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டன. அதன் விளைவாக சுகாதாரம், கல்வி, வங்கி சேவைகள், அடிப்படை வசதிகள் என அந்த பகுதிகளில் அபார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : எல்.பி.ஜி பற்றாக்குறை: மண்ணெண்ணெய் விதிகளில் தளர்வு.. 60 நாட்களுக்கு அவசர விநியோகம் தொடக்கம்
மருத்துவ வசதிகளை பொறுத்தவரை, சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் 240 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. மேலும், பிஜாபூர் மற்றும் சுக்மா போன்ற பகுதிகளில் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு, தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக சிகிச்சை வழங்கப்பட்டன. கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த மருத்துவ வசதிகள் மூலம் 67,500க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேசமயம், 70,000க்கும் மேற்பட்ட சமூக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கிராமங்கள் தோறும் மருத்துவ சேவைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அனைத்து பகுதிகளிலும் வங்கி மற்றும் மருத்துவ சேவைகள்
வங்கி சேவைகளை பொறுத்தவரை, முன்பு வங்கிகளே இல்லாத பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் வங்கி சேவைகளுடன் தொடங்கப்பட்டன. மேலும், 1,800க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மற்றும் 1,300 ஏடிஎம்கள் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 75,000க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் கிராமங்களுக்கு நேரடியாக வங்கி சேவைகள் சென்றடைந்துள்ளன.
கல்வியை பொறுத்தவரை, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 9,300க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. பழங்குடியினர் மாணவர்களுக்காக மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு, அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது.மேலும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவதோயா வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளும் இந்த பகுதிகளில் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி.. தனக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி!
மேலும் அடிப்படை வசதிகளை பொறுத்தவரை 17,500 கிலோ மீட்டருக்கு நீளமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 9,000 மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு, பல பகுதிகள் 4ஜி சேவைகள் வழங்கப்பட்டன. ரயில் சேவைகளும் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, முன்பு தனித்துவிடப்பட்ட பகுதிகள் நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தலை புறக்கணித்த பகுதிகளில் கூட மக்கள் வாக்களிக்க தொடங்கினர். இந்த அடிப்படை வசதிகள் மேற்கொண்டதன் காரணமாக நக்சல் பிரச்னைகள் அந்த பகுதியில் முற்றிலும் முடிந்தது. தற்போது அந்த பகுதியில் அமைதி நிலவுகிறது.