கோவிலில் கூட்டநெரிசல்.. 8 பெண் பக்தர்கள் பலி.. 12க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பீகாரில் சோகம்!!
Stampede At Bihar Temple: அங்கு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பீகார், மார்ச் 31: பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. நாலந்தா மாவட்டம் பீகார் ஷெரீப் அருகே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள மக்ரா கிராமத்தில் புகழ்பெற்ற சீதளாஷ்டமி (Sheetlaashtami) கோவில் அமைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், அன்னை சீதளாவை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.
இதையும் படிக்க: நாளை தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது!
சம்பவம் நடந்தது எப்படி?
அங்கு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நிர்வாகத்தின் மீதான அதிருப்தி:
சம்பவ இடத்தில் இருந்த மம்தா தேவி என்ற பக்தர் கூறுகையில், “செவ்வாய்க்கிழமைகளில் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். நாங்கள் பாட்னாவிலிருந்து தரிசனத்திற்காக வந்தோம். ஆனால் நிர்வாகக் குறைபாட்டால் இந்த விபத்து நடந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வந்த பிறகும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இங்கு இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளன. மயக்கமடைந்த பெண்களுக்கு அங்கிருந்த தன்னார்வலர்கள் சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்தும், முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர்களைக் காப்பாற்ற போராடியதைக் காண முடிந்தது.
துணை முதல்வர் இரங்கல்:
இந்த விபத்து குறித்து பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாலந்தா சீதளா தேவி கோவிலில் நடந்த இந்த சம்பவம் இதயத்தை ரணமாக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘இந்தியாவில் போதுமான எரிபொருள் உள்ளது, கவலைப்படத் தேவையில்லை’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.