சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

Caste Census: 16 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்கள் இடம்பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இதில் 34 லட்சம் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் டிஜிடல் முறையில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Jun 2025 10:46 AM

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2027 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று ஜூன் 16,2025, வெளியாகும் என மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Central Minister Amit Shah) தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் கடைசியாக, இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த பணிகள் முடக்கப்பட்டது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் சுமார் 8,754 கோடி ரூபாய் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு:

மேலும் அதில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கவும் 3 ஆயிரத்து 941 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து தான் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர், இருப்பிடம், தந்தையின் பெயர், வேலை, பாலினம், திருமணமான நிலை, வயது உள்ளிட்ட 29 கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.

அதில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டவர்களின் விவரங்கள் மட்டும் சேர்க்கப்படும் .ஆனால் தற்போது மத்திய அரசு அறிவிப்பின்படி வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி என்பது இடம்பெறும் அதாவது 29 கேள்விகளுக்கு பதிலாக 30 கேள்விகள் இடம் பெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையில் அந்த கேள்வி இடம்பெருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 34 லட்சம் அதிகாரிகள்:


மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதாவது ஜூன் 15 2025 அன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் ”மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும். முதல் முறையாக இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 இலட்சம் பேர் அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியினை மேற்கொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். வீட்டு வசதி பட்டியல் செயல்பாடு எனப்படும் முதல் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துகள் மற்றும் வசதிகள் சேர்க்கப்படும். அதை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு எனப்படும் இரண்டாவது கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபரின் மக்கள் தொகை சமூக பொருளாதார கலாச்சாரம் மற்றும் பிற விவரங்கள் சேர்க்கப்படும். செல்போன்கள் மூலம் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் சுயமாக கணக்கெடுக்கவும் முடியும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது