பைக் டாக்ஸிக்கு பதில் பைக் பார்சல்.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து அதிரடி..

Bike Taxi - Bike Parcel Service: பெங்களூருவில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பைக் டாக்ஸி சேவைக்கு பதிலாக பைக் பார்சல் சேவை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 11 ஆர்.டி.ஓ வட்டாரங்களில் 103 பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக் டாக்ஸிக்கு பதில் பைக் பார்சல்.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து அதிரடி..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Jun 2025 08:16 AM

பைக் டாக்ஸி சேவை: பெங்களூருவில் ஜூன் 16 2025 முதல் பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பைக் பார்சல் என்ற பெயரில் நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 16 2025 ஆம் தேதியில் மட்டும் பெங்களூரு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பை டாக்ஸி சேவைகளை நிறுத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் அங்கே பைக் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஓலா, ஊபர், ராப்பிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஜூன் 16 2025 முதல் தடை விதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் இந்த பைக் டாக்ஸியை பயன்படுத்துகின்றனர். குறைவான கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்வதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் இந்த பைக் டாக்ஸியை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

பைக் டாக்ஸி சேவைக்கு தடை:

ஆனால் இந்த பைக் டாக்ஸி சேவைகளுக்கு எதிராக புகார்கள் எழுந்த நிலையில் குறிப்பாக பைக் டாக்ஸியில் செல்லும் பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை பெங்களூருவில் ஜூன் 16 2025 முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி பல நிறுவனங்கள் இந்த பைக் டாக்ஸி சேவையை தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துறை தரப்பில் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பைக் டாக்ஸிக்கு பதில் பைக் பார்சல் சேவை:


பைக் டாக்ஸிக்கு பதிலாக பைக் பார்சல் டெலிவரி சேவைகள் என மறைமுகமாக இந்த பைக் டாக்ஸி  சேவை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், “ பைக் டாக்ஸி சேவைகளை பார்சல் என மாற்றி பயணிகளை ஏற்றி செல்வது குறித்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்குவரத்து துறை தரப்பில் பைக் டாக்ஸிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது

103 வாகனங்கள் பறிமுதல்:

ஓலா உபர் ராப்பிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து பைக் டாக்ஸி சேவைகளை செய்து வருவதன் காரணமாக போக்குவரத்து அலுவலர்கள் தரப்பில் இந்த டாக்ஸிகளை பறிமுதல் செய்துள்ளனர். 11 ஆர்டிஓ அதிகார வரம்புகளில் மொத்தம் 103 பைக் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி நகர் ஆர்டிஓ வில் அதிகப்படியாக 16 பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும். அதனை தொடர்ந்து எலக்ட்ரானிக் சிட்டியில் 15 டாக்ஸிகளும், கே ஆர் புரா எல்லையில் 13 பைக் டாக்ஸிகளும் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாணவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் பை டாக்ஸி செயலிகள் மூலம் வேலை செய்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக ராப்பிடோ வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ” ஜூன் 16 2025 முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகள் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க இடை நிறுத்தப்படுகிறது. பைக் டாக்ஸிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்”  என குறிப்பிடப்பட்டுள்ளது