Gujarat Plane Crash Highlights: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?

Air India Plane Crash highlights in Tamil: விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது அருகிலுள்ள கட்டிடம் அல்லது சுவரில் மோதியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Gujarat Plane Crash Highlights: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?

விமான விபத்து

Updated On: 

12 Jun 2025 21:39 PM

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வியாழக்கிழமை (2025,ஜூன் 12) பிற்பகல் ஏர் இந்தியா பயணிகள் விமானமான போயிங் ட்ரீம்லைன் 787 விபத்துக்குள்ளானது. இது தொடர்பான திகிலூட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்துள்ளது. விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது அருகிலுள்ள கட்டிடம் அல்லது சுவரில் மோதியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Jun 2025 09:28 PM (IST)

    விமான விபத்து இடத்தில் அமித்ஷா ஆய்வு

    அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடைந்துள்ளார். விபத்து குறித்த தகவல்களை அவர் கேட்டறிந்து வருகிறார்

  • 12 Jun 2025 08:09 PM (IST)

    ரூ.1கோடி நிவாரணம்

    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் முழு செலவை தாங்களே ஏற்போம் என டாடா தெரிவித்துள்ளது

  • 12 Jun 2025 07:23 PM (IST)

    அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிர் தப்பினார்.

    அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிர் தப்பினார். அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 11A எண் இருக்கையில் பயணித்தவர் உயிருடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார். உயிர் பிழைத்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • 12 Jun 2025 06:25 PM (IST)

    அகமதாபாத் விமான விபத்து.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

    “அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்து கொள்வதோடு, விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.  மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • 12 Jun 2025 06:10 PM (IST)

    அகமதாபாத் விமான விபத்து.. அனைவரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

    அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடங்களில் ஏர் இந்தியா விமானம் மோதிய விபத்தில் அதில் பயணித்த 242 பேர் உயிரிழந்ததாக அகமதாபாத் காவல் ஆணையர் ஞானேந்திர சிங் தெரிவித்தார். விபத்தின் தீவிரம் காரணமாக உடல்கள் அனைத்தும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட உடல்கள் அம்மாவட்ட சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஞானேந்திர சிங் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 230 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் 10 விமானப் பணிப்பெண்களும் அடங்குவர்.

  • 12 Jun 2025 06:00 PM (IST)

    விமான விபத்து மனதை நொறுக்குகிறது – ராகுல்காந்தி

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து மனதை நொறுக்குகிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலி மற்றும் பதட்டம் நினைத்துப் பார்க்க முடியாதது. இந்த நம்பமுடியாத கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை – ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

  • 12 Jun 2025 05:50 PM (IST)

    அகமதாபாத் விமான விபத்து.. கண்ணப்பா படக்குழு எடுத்த முக்கிய முடிவு

    அகமதாபாத் விமான விபத்து காரணமாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கண்ணப்பா படத்தின் நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக மஞ்சு விஷ்ணு சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் படத்தின் மிகப்பெரிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கண்ணப்பா படக்குழு விமான விபத்தின் சூழல் அறிந்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.

  • 12 Jun 2025 05:40 PM (IST)

    ஏர் இந்தியா விமான விபத்து.. பிரதமர் மோடி கவலை

    அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உடன் நிற்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன் என கூறியுள்ளார்.

  • 12 Jun 2025 05:28 PM (IST)

    விமான விபத்து.. அவசர உதவி கோரிய விமானி.. வெளியான தகவல்

     அகமதாபாத்தில் இருந்து 242 பேரை ஏற்றி சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. முன்னதாக விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஒரு விமானம் கடுமையான சிக்கலில் சிக்கி அவசர உதவி தேவைப்படும்போது ஒரு விமானியால் அனுப்பப்படும். “மேடே” என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான “மைடேஸ்” என்பதில் இருந்து வந்தது. இதற்கு “எனக்கு உதவுங்கள்” என்பது பொருளாகும்.

  • 12 Jun 2025 05:13 PM (IST)

    விமான விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வருகை

    90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளது.

  • 12 Jun 2025 04:29 PM (IST)

    Ahmedabad Plane Crash Live Update: அகமதாபாத் விமானம் விபத்து – இங்கிலாந்து பிரதமர் வருத்தம்

    பல பிரிட்டிஷ் பிரஜைகளை ஏற்றிச் சென்ற லண்டனுக்குச் சென்ற விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள்  வெளியாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ட்வீட் செய்துள்ளார். மேலும் நிலைமை குறித்து தொடர்ந்து அறிந்து வருகிறேன், இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

  • 12 Jun 2025 04:25 PM (IST)

    விமான விபத்து – தகவல்களை பெற மாநில அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து அம்மாநில அரசு அவசர கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. விமான விபத்து மற்றும் அதில் பயணித்த பயணிகள் பற்றிய தகவல்களைப் பெற 8405304 மற்றும் 079-2320510900 என்ற எண்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Jun 2025 04:14 PM (IST)

    காயமடைந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை

    ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்க குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து அரசு அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Jun 2025 04:00 PM (IST)

    அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

    ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து அகமதபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு வர வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • 12 Jun 2025 03:45 PM (IST)

    ஏர் இந்தியா விமானம் விபத்து.. பிரதமர் மோடி அகமதாபாத் பயணம்

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமானம் விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லியில் இருந்து அங்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 12 Jun 2025 03:35 PM (IST)

    ஏர் இந்தியா விமானம் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா  விமான விபத்து குறித்த தகவல் அறிந்துக் கொள்ள  1800-5691-444 என்ற உதவி எண்ணை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 12 Jun 2025 03:29 PM (IST)

    விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றி வெளியான தகவல்

    லண்டன் செல்லும் விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்ததாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் பெயரும் உள்ளது.

  • 12 Jun 2025 03:14 PM (IST)

    விமான விபத்து.. நிலைமையை விசாரித்த பிரதமர் மோடி

    அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் பேசி நிலைமையை பற்றி கேட்டறிந்தார். இதனிடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட நாயுடு அகமதாபாத் சென்று கொண்டிருப்பதாக அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • 12 Jun 2025 03:06 PM (IST)

    நிலைமையை கண்காணித்து வருகிறோம்.. விமானத்துறை அமைச்சர் தகவல்

    ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக கூறியுள்ளார்.

  • 12 Jun 2025 03:02 PM (IST)

    ஏர் இந்தியா விளக்கம்

    மேகனிநகரில் விபத்துக்குள்ளான விமானத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் “அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானத்தை இயக்கும் AI171 விமானம் இன்று அதாவது ஜூன் 12, 2025 அன்று ஒரு விபத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் கூடுதல் புதுப்பிப்புகளை http://airindia.com மற்றும் எங்கள் X பக்கத்தில் விரைவில் பகிர்ந்து கொள்வோம்,” என்று தெரிவித்தது.

  • 12 Jun 2025 02:56 PM (IST)

    விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. முன்னாள் முதல்வரும் பயணித்தாரா?

    அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான பயணத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 12 Jun 2025 02:53 PM (IST)

    அகமதாபாத் விமான விபத்து.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்!

    விமான விபத்து தொடர்பான பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மேலே செல்ல முயன்ற விமானம் தாழ்வாக பறந்து விபத்தை சந்திக்கும் காட்சிகள் உள்ளது.