Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7 வயது சிறுவனின் குடலில் இருந்து முடி, புல், ஷூலேஸ் அகற்றம்.. ட்ரைக்கோபெசோவர் என்றால் என்ன?

Ahmedabad: அகமதாபாதில் 7 வயது சிறுவனின் வயிற்றில் இருக்கக்கூடிய சிறுகுடலிலிருந்து முடி, புல் மற்றும் ஷூ லேஸ் போன்ற பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிறுவனின் வயிற்றில் இருந்த இந்த பொருட்களை அகற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

7 வயது சிறுவனின் குடலில் இருந்து முடி, புல், ஷூலேஸ் அகற்றம்.. ட்ரைக்கோபெசோவர் என்றால் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Sep 2025 11:07 AM IST

அகமதாபாத், செப்டம்பர் 22, 2025: அகமதாபாத்தில் ஒரு அரிய மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில், 7 வயது சிறுவனின் வயிற்றில் இருக்கக்கூடிய சிறுகுடலிலிருந்து முடி, புல் மற்றும் ஷூ லேஸ் போன்ற பொருட்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை பலரையும் வியக்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ரத்தினமில் வசிக்கும் சுபம் நிமானா, கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் எடை இழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2 லட்சம் ரூபாய் செலவழித்தபோதிலும், அவரது உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னர் அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் முற்றிலும் எதிர்பாராத ஒரு முடிவு வெளியானது.

சிறுவனின் குடலில் முடி, புல், ஷூலேஸ்:

அதாவது, சி.டி. ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோப்பியின் முடிவில் சிறுவனின் இரைப்பைக் குழாயில் ஒரு அசாதாரணமான கட்டி இருந்தது தெரியவந்தது. மருத்துவ ரீதியில் ட்ரைக்கோபெசோவர் என்று அழைக்கப்படும் அந்த 7 வயது சிறுவனின் வயிற்றில் முடி உருண்டை, புல் மற்றும் ஷூ லேஸ் நூல் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க: இளைஞரை குழந்தை திருமணம் செய்த இளம் பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

பேராசிரியர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ராம்ஜி தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, ட்ரைக்கோபெசோவரை அகற்ற ஆய்வு லாப்ரடோமி (Exploratory Laparotomy) மேற்கொண்டது. பேராசிரியர் டாக்டர் சகுந்தலா கோஸ்வாமி மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் பரத் மகேஸ்வரி தலைமையிலான மயக்கமருந்து குழு, அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் நிலைமையை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

சிறுவனுக்கு மனநல ஆலோசனை:

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சுபம் ஆறு நாட்களுக்கு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் தொடர் கண்காணிப்பில் இருந்தார். அதைத் தொடர்ந்து ஏழாவது நாளில் கட்டி முழுமையாக அகற்றப்பட்டதை உறுதிப்படுத்த சாய்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலைக்கு பங்களித்த நடத்தை அம்சங்களை நிவர்த்தி செய்ய, மனநல மருத்துவர் ஒருவர் குழந்தைக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் படிக்க: இளைஞரை குழந்தை திருமணம் செய்த இளம் பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி இதுகுறித்து கூறுகையில்: “குழந்தைகளில் ட்ரைக்கோபெசோவர் மிகவும் அரிதானது. 0.3 முதல் 0.5 சதவீதம் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளின் ஏதேனும் அசாதாரணமான உணவு பழக்கம் அல்லது நடத்தைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற பழக்கம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு கூட வழிவகுக்கும்,” என தெரிவித்துள்ளார்.

ட்ரைக்கோபெசோவர் என்றால் என்ன?

ட்ரைக்கோபெசோவர் என்பது ஒரு வகை பெசோவர் (Bezoar). இது இரைப்பை அமைப்பில் சிக்கிக் காணப்படும் கட்டிகளாகும். பெரும்பாலும் ட்ரைகோட்டிலோமேனியா (Trichotillomania) மற்றும் ட்ரைகோபெஜியா போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையது. இதன் காரணமாக வயிற்று வலி, வாந்தி, வீக்கம், எடை இழப்பு, மலச்சிக்கல் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் குடல் அடைப்பு ஆகியவை அறிகுறிகளாக தென்படும். சிறிய கட்டிகளை எண்டோஸ்கோப்பி மூலம் அகற்ற முடியும். ஆனால் பெரிய கட்டுகளுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளில் மீண்டும் வருவதைத் தடுப்பதற்காக உளவியல் ஆலோசனையும் அவசியமாகும்.