Kuberaa Review: சூப்பரா?.. சுமாரா? – குபேரா படத்தின் விமர்சனம் இதோ!
சேகர் கம்முலா இயக்கிய குபேரா திரைப்படம், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ளது. நேர்மையான அதிகாரியாக நடிக்கும் நாகார்ஜுனாவும் , யாசகம் பெறுபவராக வரும் தனுஷூக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.

குபேரா பட விமர்சனம்
குபேரா விமர்சனம்: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் (Dhanush), நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஜிம் சர்ப், ஹரீஷ் பரேடி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “குபேரா”. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் தனுஷ் யாசகம் பெறுபவராக நடித்திருக்கிறார். குபேரா படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (2025, ஜூன் 20) உலகமெங்கும் இப்படம் வெளியாகியுள்ள நிலையில் குபேராவின் விமர்சனத்தை நாம் காணலாம்.
படத்தின் கதை
நேர்மையான சிபிஐ அதிகாரியாக வரும் நாகார்ஜுனா அமைச்சர் ஒருவரின் வீட்டை சோதனை செய்ததற்காக திட்டமிடப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக வரும் ஜிம் சர்ப் அவரை ஜாமினில் வெளியே எடுக்கிறார். வங்காள விரிகுடாவில் ஒரு மிகப்பெரிய எண்ணை கிணறு கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் கோடி அதிகாரிகளுக்கு கொடுக்க ஜிம் சர்ப் ஒப்புக்கொள்கிறார்.
அந்தப் பணத்தை கை மாற்றுவது தொடர்பாக நாகார்ஜுனா ஜாமினில் எடுக்கப்படுகிறார். இதனை எடுத்து நாகார்ஜுனா தனுஷ் உட்பட நான்கு யாசகம் பெறுபவர்களை தேர்வு செய்து அவர்கள் பெயரில் வினாமி நிறுவனங்களை உருவாக்குகிறார்.. அரசு அதிகாரிகளுக்கு இவர்கள் நான்கு பேரின் மூலம் பணத்தை மாற்ற திட்டமிடப்படுகிறது.
அதே சமயம் ஒவ்வொருவர் பணமும் மாற்றப்படும் போது நாகார்ஜுனா தேர்வு செய்தவர்களில் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் தனுஷின் முறை வரும்போது அவர் தப்பி விடுகிறார். அதேசமயம் பணம் பரிமாற்றம் தடைபடுகிறது. தனுஷ் தப்பிப்பதற்கான காரணம் என்ன?, நாகார்ஜுனாவின் கும்பல் அவரைப் பிடித்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த குபேரா. இப்படத்தில் நாகார்ஜூனா தீபக் என்ற கேரக்டரிலும், தனுஷ் தேவாவாகவும், ராஷ்மிகா மந்தனா சமீராகவும் நடித்துள்ளனர்.
படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த குபேரா படம் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். சேகர் கம்முலாவின் படம் என்ற போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஹீரோவான தனுஷ் யாசகம் பெறுபவர் வேடத்தில் நடிக்கிறார் என்றதும் இன்னும் பல மடங்கு எதிர்பார்ப்பு கூடியது. அதனை எல்லாம் தனது அசாத்திய திரைக்கதை மூலம் சேகர் கம்முலா, சாத்தியமாக்கி இருக்கிறார்.
யாசகம் பெறுபவர் வேடத்தில் தனுஷ் தன்னுடைய நடிப்பில் ரசிகர்களை நெகிழ வைக்கிறார். ஒரு யாசகம் பெறுபவரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் அவருக்கு நிச்சயம் பாராட்டுகள் கிடைக்கும். அதேசமயம் இதுவரை ஜாலியான கேரக்டராக பலம் வந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் சோகம், கண்ணீர் என மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு திருப்திகரமான படமாக இருக்கும்.
சூழ்நிலை காரணமாக கொள்ளை கும்பலுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பு அத்தனை யதார்த்தமாக அமைந்துள்ளது. அதேபோல் வில்லனாக வரும் ஜிம் சார்பின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. மேலும் நாசர், சுனைனா, பாக்யராஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டரை சரியாக செய்துள்ளார்கள்.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையும், நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும் உயிரோட்டமாக அமைந்துள்ளது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகிறது. கடைசி வரை பரபரப்பு குறையாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கும் இந்த குபேரா ரசிகர்கள் மனதில் குபேரனாக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளான் என்றே சொல்லலாம்.