அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!
Ops Supporter Join Aiadmk: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த நிலையில், இதை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதில், வெல்லமண்டி நடராஜனை தொடர்ந்து, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இணைந்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்தவரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரும், வடசென்னை மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக இல்லை என்பதாலும், ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை விரும்பாததாலும் அவர்கள் அதிமுகவில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் வாழ்வில் இருந்து விலகிய குன்னம் ராமச்சந்திரன்
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்ததால் அவரது ஆதரவாளர்கள் பலர் அவரிம் இருந்து விலகி, திமுகவில் இணைந்து வந்தனர். இதில், குன்னம் ராமச்சந்திரன் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் சில காரணங்களால் திமுகவில் இணையும் எண்ணத்தை விடுத்து விட்டு, அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
மேலும் படிக்க: “ஓபிஎஸ் வெளியேறியது அதிமுகவினருக்கு தீபாவளி”.. சி.வி.சண்முகம் விமர்சனம்!!
கழன்று சென்ற ஓபிஎஸ் அணியின் அச்சாரம்
இவரைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் அச்சாரமாக திகழ்ந்து வந்தவரும், ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகரமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவரிடம் இருந்து விலகி, தனியாக எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததுடன், கொடியையும் அறிமுகம் செய்து பரபரப்பை அதிகப்படுத்தினார். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பல்வேறு அதிமுகவினர் ஓபிஎஸ் தலைமையில் அணியாக செயல்பட்டு வந்தனர்.
அதிமுகவில் மேலும் பலர் இணைய வாய்ப்பு
இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவில் மீண்டும் தங்களை இணைத்து வருகின்றனர். இதனால், அரசியல் களத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவு சரியாகி, தற்போது மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து மேலும் பல ஓ பி எஸ் ஆதரவாளர்கள் அ தி மு கவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், கரைந்து கொண்டே சென்ற அதிமுக தற்போது தேறி வருகிறது.
மேலும் படிக்க: “அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!