“வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்க அனுமதி இல்லை”.. தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!!
Tamilnadu Assembly Election: உடன்பிறப்புக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில் நேற்று தகவல் வெளியிடப்பட்டது. பொதுமக்களிடம் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனின் மாடலை தந்து வாக்கு சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையான அனுமதி பெற்றுள்ளது. மாற்றுக்கட்சியினர் பிரச்சினை செய்தால் அனுமதி நகலைக் காட்டவும் என்று கூறப்பட்டுள்ளது.

மாதிரிப் புகைப்படம்
Tamilnadu Polls 2026: தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூப்பன்களை அச்சடித்து மக்களுக்கு விநியோகித்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்க ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று அந்த கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விளம்பரம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியையும் திமுக பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள், ரூ.8 ஆயிரத்துக்கான டோக்கனை அச்சிட்டு மக்களிடம் திமுக வழங்கி வருவதாக குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இதுதொடர்பான புகாரையும் அதிமுக வக்கீல் செந்தில்வேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. 3 முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பரப்புரை.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?
ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக:
அதில், தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் ரூ.8 ஆயிரம் தொகைக்கான மாதிரி கூப்பனை திமுகவினர் அச்சிட்டு வழங்குகின்றனர் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில், உடன்பிறப்புக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில் நேற்று தகவல் வெளியிடப்பட்டது. அதில், பொதுமக்களிடம் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனின் மாடலை தந்து வாக்கு சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையான அனுமதி பெற்றுள்ளது. மாற்றுக்கட்சியினர் பிரச்சினை செய்தால் அனுமதி நகலைக் காட்டவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒளிபரப்பு விளம்பரத்துக்காக கடந்த 1ம் தேதி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரில் எம்.சி.எம்.சி. குழுவிடம் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழும் அந்த தகவலுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
துண்டுப் பிரசுரங்களுக்கு பொருந்தாது:
இதற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதில் அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது, மேற்கூறிய சான்றிதழ், மின்னணு ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்களான, குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.
அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்துமே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு மற்றும் நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும், தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகமெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்.. கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்..
தேர்தல் ஆணையம் எச்சரிக்கை:
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, தேர்தல் ஆணையத்திடம் விளம்பர ஒளிபரப்புக்காக பெற்ற அனுமதியை, டோக்கனாக அச்சடித்து விநியோகிக்கக் கூடாது. அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவை மீறியதாக அமையும். அதன்படி, வழக்கு தொடரவும், டோக்கன்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் சில மாவட்டங்களில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கனை வழங்குபவரோ, டோக்கனை அச்சிட்டவரோ அதை கொண்டு செல்பவரோ நடவடிக்கைக்காக ஆளாகலாம். ஒருவேளை டோக்கனில் வேட்பாளரின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தால், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.