என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த அதிமுக துணை செயலர்… புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!
Puducherry AIADMK : புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், அந்தக் கட்சியின் மாநில துணை செயலர் வையாபுரி மணிகண்டன் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இவர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த அதிமுக துணை செயலர் வையாபுரி
புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசின் பதவி காலம் ஜூன் 15- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புது அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டி கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், பாமக-அஇபுதமமுக ( வி.கே.சசிகலா) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், தனியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளும், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளும் என 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், என். ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகிய துணை செயலர்
இதேபோல, அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளான உப்பளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மாநில செயலாளர் ஏ. அன்பழகன் மற்றும் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கட்சியின் முன்னாள் துணைச் செயலாளர் ஏ. காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அதிமுகவின் மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பெயர் இடம் பெறவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த வையாபுரி மணிகண்டன் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலியார் பேட்டை தொகுதியில் வையாபுரி மணிகண்டன், உப்பளம் தொகுதியில் அன்பழகன். முதலியார் பேட்டை தொகுதியில் பாஸ்கர். நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம் சக்தி சேகர் ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இதே தொகுதியில் 4 பேரும் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக அதிமுகவை சேர்ந்த எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.
புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பு
இதனால், கடந்த தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் என எவரும் கிடையாது. இதன் காரணமாக, வருகின்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும், அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பெயர் இடம் பெறாமல் போனதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். இlதைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி முன்னிலையில் அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த சசிகலா