எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை..
ADMK District Secretaries Meeting: சென்னையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் களத்தில் இறங்கி, ஒவ்வொரு தெருவாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 4, 2026: மே மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியலைப் பொருத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக, 2026 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது.
தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
அதிமுகவின் தேர்தல் வியூகம்:
அதிமுகவைப் பொருத்தவரையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாத நிலை தொடர்வது, கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும் என்ற நோக்கில் கட்சி ஆயத்தமாகப் பணியாற்றி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதனுடன், பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரக்கூடிய நாட்களில், பிரேமலதா தலைமையில் தேமுதிகவும் விரைவில் தனது கூட்டணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவின் ஐந்து ஆண்டு ஆட்சியில் மக்கள் செலுத்திய வரிகள் மற்றும் கட்டணங்களை, அதிமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு விளக்கும் வகையில் டிஜிட்டல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கள்ளக்காதலால் மருத்துவ மாணவி கொலை…கைதான தந்தை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்!
அதேபோல், மாவட்டச் செயலாளர்கள் களத்தில் இறங்கி, ஒவ்வொரு தெருவாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்தெந்த தொகுதிகளில் கட்சி பலவீனமாக உள்ளது, அந்த இடங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுபோன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.