EPFO : இபிஎஃப்ஓவில் வழங்கப்படும் 5 விதமான ஓய்வூதியங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
5 Types of Retirement Benefits in EPFO | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், இபிஎஃப்ஓவில் கிடைக்கும் ஓய்வூதிய பலன்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக (EPFO – Employee Provident Fund Organization) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கி அந்த கணக்கில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்கிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை இபிஎஃப்ஓவில் தொடங்கப்பட்ட கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஊழியர்கள் தங்களது பணத்தை எடுக்கும் வரை அதற்கான வட்டியும் முறையாக வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர் தனது பணி காலம் முழுவதும் பிஎஃப் தொகை எடுக்கவில்லை என்றால் அவர் அதனை ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ வழங்கும் 5 விதமான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ வழங்கும் 5 விதமான ஓய்வூதிய திட்டங்கள்
மனைவி மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் அவரது மனைவி மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள். இந்த இரண்டு குழந்தைகளில் முதல் குழந்தைக்கு 25 வயது நிறைவடையும் போது, அதே குடும்பத்தில் மூன்றாவது குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு ஓய்ஊதியம் வழங்கப்படும்.
ஊனத்திற்கு வழங்கப்படும் ஓய்வூதியம்
இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களது பணியின் போது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் அடைந்தால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு உறுப்பினர்களின் வயது மற்றும் அவர் 10 ஆண்டு பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறிப்பாக உறுப்பினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஈபிஎஸ்-ல் பங்களித்திருந்தாலும் கூட அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
குழந்தைகளுக்கான ஓய்வூதியம்
இபிஎப்ஓ உறுப்பினர் உயிரிழந்து அவரது வாழ்க்கை துணையும் உயிரிழந்து விட்டால், அவர்களின் 25 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
நாமினிக்கு வழங்கப்படும் ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் அவருக்கு வாழ்க்கை துணையோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவர் யாரை நாமினியாக பரிந்துரை செய்துள்ளாரோ அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த நிலையில் உறுப்பினர் தனது தாய் மற்றும் தந்தையை நாமினியாக நியமனம் செய்திருந்தால் அவர்கள் இருவருக்கும் சரி பாதியாக ஓய்வுதியம் வழங்கப்படும். இல்லை தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரை மட்டும் நாமினியாக நியமனம் செய்திருந்தால் அவருக்கே முழு தொகையும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
தாய், தந்தைக்கு ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் அவரது தந்தை ஓய்வூதியம் பெற தகுதியானவராக கருதப்பட்டு அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதுவே உறுப்பினரின் தந்தையும் உயிரிழந்துவிட்டால் தாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.