Student Visa : வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் பணியை தொடங்கிய அமெரிக்கா.. ஆனால் சில கட்டுப்பாடுகள்!
United States of America Resumes Student Visas | வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
அமெரிக்கா, ஜூன் 20 : வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்க அரசு (American Government) மீண்டும் தொடங்கியுள்ளது. 2025 மே மாதம் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அந்த பணிகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை (America Department of Foreign Affairs) கூறியுள்ளது. இதற்கு அமெரிக்கா ஒரு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது குறித்து, அதற்கு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டிரம்ப், வெளிநாடுகளுக்கான கொள்கைகளில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக 2025 மே மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, விசா நேர்காணல்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அப்போது மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்து அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் பணியை தொடங்கிய அமெரிக்கா
Breaking news: The State Department is requiring that all student visa applicants make their social media accounts public to be scrutinized for hostility toward the U.S., according to a cable obtained by The Washington Post. https://t.co/P33hO1eXYa
— The Washington Post (@washingtonpost) June 18, 2025
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளோம். ஆனால் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளை அமெரிக்க அரசின் ஆய்வுக்கு உட்படுத்த திறந்து விட வேண்டும். அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அவர்கள் தங்களது ஆன்லைன் செயல்பாடுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம் என்று கூறியுள்ளது.