Indonesia : இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. உயர்மட்ட எச்சரிக்கை.. பொதுமக்கள் பாதிப்பு!
Lewotobi Laki-laki Volcano Erupts in Indonesia | இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து சிதறியது. சுமார் 1,584 மீட்டர் உயர் கொண்ட இந்த எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
இந்தோனேசியா, ஜூன் 19 : இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துள்ள (Indonesia Volcano Eruption) நிலையில், அங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அங்கு உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், இந்தோனேசியாவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – மிகுந்த சேதம்
இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் திமூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1,584 மீட்டர் உயரம் உள்ள எரிமலை நேற்று (ஜூன் 18, 2025) வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 32 ஆயிரத்து 800 அடி உயரத்திற்கு கரும் புகை பரவியுள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மற்றும் சாம்பலாக காணப்படுவதால் எரிமலையை சுற்றி எட்டு கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள பொதுமக்கள் எரிமலைக்கு அப்பால் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெடித்து சிதறிய எரிமலை – வான் வரை எழுந்த புகை
BREAKING: Mount Lewotobi Laki-laki in Indonesia has erupted 🌋
“There was an eruption of Mount Lewotobi Laki-laki on Tuesday, June 17, 2025, at 17:35 WITA with an observed ash column height of ± 10,000 m above the peak (± 11,584 m above sea level),” said the Volcano Observation… pic.twitter.com/lpWZnHQwk1
— Volcaholic 🌋 (@volcaholic1) June 17, 2025
எரிமலை வெடிப்பு எதிரொலி – விமானங்கள் ரத்து
எரிமலையின் சாம்பல்கள் மற்றும் புகை விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பாலி நகரத்துக்கும் பல்வேறு சர்வதேச நகரங்களுக்கும் இடையிலான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாலியில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் சுமார் 120 எரிமலைகள் உள்ளன. தற்போது அவற்றில் ஒன்று வெடித்து சிதறியதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.