அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தாரில் பரபரப்பு
US Iran Conflict : மத்திய கிழக்கு பகுதியில் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது, அமெரிக்கா அணு உள்நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கான பதிலடி நடவடிக்கையாக கூறப்படுகிறது.

ஈரான் – அமெரிக்கா (Americ) இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், முக்கியமான அமெரிக்க ராணுவ தளமான கத்தாரில் உள்ள “அல் உதெய்த்” விமானப்படை தளத்தை நோக்கி, ஜூன் 23, 2025 அன்று ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூன் 21, 2025 அன்று வார இறுதியில் ஈரானின் பூமிக்கடியில் அமைந்துள்ள அணு நிலையங்களை நோக்கி 30,000 பவுண்ட் எடையுள்ள பங்கர் பஸ்டர் வகை குண்டுகளை வீசியதற்கு பதிலளிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம், அங்கு வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. எதற்காக இந்த அறிவிப்பு என்பதைப் பற்றி தகவல் இல்லை. முன்னெச்சரிக்கையாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
அத்துடன், கத்தார் தனது விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான தோஹாவைச் மையமாகக் கொண்டது என்பதால், பல விமானங்கள் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையை எதிர்நோக்கி, கத்தாரில் உள்ள இந்திய தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும், கத்தார் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவு
In view of the ongoing situation, Indian community in Qatar is urged to be cautious and remains indoors. Please remain calm and follow local news, instructions and guidance provides by Qatari authorities. The Embassy will also keep updating through our social media channels.
— India in Qatar (@IndEmbDoha) June 23, 2025
இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தற்போது ரஷ்ய அதிபர் புடினுடன் மாஸ்கோவில் சந்தித்து, ரஷ்யாவின் ஆதரவை நாடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலையிலேயே இஸ்ரேல், தேஹ்ரானில் உள்ள அரசியல் கைதிகளுக்கான சிறைச்சாலையை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஈரான் அரசின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் பகுதிகளையே இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கான முன்னெச்சரிக்கையாக கருதப்படுகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ச்சியான தாக்குதல்களும், பதில்களும், உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.