நொங்கு பறிக்க முயன்றபோது விபரீதம்.. மின்சாரம் தாக்கி இரு கல்லூரி மாணவர்கள் பலி.. காஞ்சிபுரத்தில் சோகம்!!
Tragedy in kanchipuram: தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரிப் புகைப்படம்
காஞ்சிபுரம், ஏப்ரல் 30: கோடை விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் சேர்ந்து நொங்கு பறிக்கச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திருமங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ். கோடை விடுமுறை என்பதால், இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
இரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சோகம்:
ஏரிக்கரையில் இருந்த பனை மரத்தில் நொங்கு பறிப்பதற்காக அவர்கள் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, பனை மரத்திற்கு மிக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அந்த இரும்புக் கம்பி உரசியுள்ளது. மின்சாரம் இரும்புக் கம்பி வழியாகப் பாய்ந்ததில், தட்சிணாமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது, அவர்களுடன் சென்ற மற்ற நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போலீஸ் விசாரணை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் நீர்நிலைகள் மற்றும் மின்சாரக் கம்பிகள் இருக்கும் இடங்களுக்கு அருகே செல்லும்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி