Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லை: காட்டுக்குள் சென்றால் இதுதான் நடக்கும்… வனத்துறை எச்சரிக்கை..!

Tirunelveli Forest Department: திருநெல்வேலி வனத்துறை, வனச் சட்ட மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. வன அழிப்பு, விலங்கு வேட்டை போன்ற செயல்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கூச்சலிடுதல், குப்பை வீசுதல் போன்ற சிறு குற்றங்களுக்கும் தண்டனை உள்ளது என எச்சரித்துள்ளது.

நெல்லை: காட்டுக்குள் சென்றால் இதுதான் நடக்கும்… வனத்துறை எச்சரிக்கை..!
வனத்துறை எச்சரிக்கைImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 24 Jun 2025 07:10 AM

திருநெல்வேலி ஜூன் 24: திருநெல்வேலி வனத்துறை (Nellai Forest Department) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வனங்களில் சட்டவிரோதமாக நுழைவது, மரங்களை வெட்டுவது, நெருப்பு மூட்டுவது, விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட செயல்கள் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. இவை இந்திய வனச் சட்டம் 1972 மற்றும் தமிழக வனவிலங்கு சட்டம் 1882-ன் கீழ் குற்றமாகக் கருதப்படும். குற்றம் புரிந்தால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். வனத்திற்குள் கூச்சலிடுதல், சத்தமிடுதல், குப்பை வீசுதல் கூட குற்றமாகும். பொதுமக்கள் சட்டவிரோதச் செயல்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். வனங்களும் உயிரினங்களும் பாதுகாப்பதே அனைவரின் கடமை என வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி வனத்துறை அதிரடி அறிவிப்பு

திருநெல்வேலி வனக்கோட்டம், மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் தமிழக வனத்துறை இணைந்து, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“வனங்களும் வன உயிரினங்களும் மதிப்பு மிக்கவை; அவற்றை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்ற தூய நோக்குடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, வனங்களில் மேற்கொள்ளக்கூடாத செயல்கள் மற்றும் அவை மீறப்படும் பட்சத்தில் ஏற்படும் கடும் சட்ட நடவடிக்கைகளைத் தெளிவாக விளக்குகிறது.

வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட செயல்கள்

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைவது, மரங்களை வெட்டுவது, பழங்களை சேகரித்தல், அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது, நெருப்பூட்டுதல், மதுபானம் அருந்துதல், குப்பை, கழிவுப் பொருட்கள், எரிவாயுப் பொருட்களை எறிவது, விலங்குகளை வேட்டையாடுதல், உணவளித்தல், விலங்குகளைக் கொன்று விற்பனை செய்தல், சத்தமிடுதல், கூச்சலிடுதல், வன எல்லைகளை மீறிச் செல்வது, ஆறுகளில் குப்பை வீசுதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் சட்டவிரோதமாகும். இவை அனைத்தும் இந்திய வனச் சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1882 ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.

தண்டனை எப்படி இருக்கும்?

மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(g) பிரிவின் கீழ், வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும் என்றும் வனத்துறை எடுத்துக்காட்டியுள்ளது.

தகவல் வழங்கும் வழிகள்

வனப் பகுதியில் அல்லது வனவிலங்குகளைத் தொடர்புடைய சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள:

திருநெல்வேலி வன அலுவலர் அலுவலகம்: 0462-2553005

மின்னஞ்சல்: dfotnv@sancharnet.in

வனக்காவல் நிலையம் செல்பேசி: 86959 33037

மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு, சென்னை: 044-24916747

மின்னஞ்சல்: rddsr@wccb.gov.in

இந்த அறிவிப்பின் மூலம், வனங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது எவ்வளவு அவசியம் என்பதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளது. இனிமேல் காட்டுக்குள் கூச்சலிட்டால்கூட தப்பாது – சிறைதண்டனை உறுதி என்பதே வனத்துறையின் எச்சரிக்கையாக உள்ளது.