Thenpennai River : தென்பெண்ணை ஆற்றில் பொங்கும் ரசாயன நுரை.. சுற்றுசூழல் பாதிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் வேதனை!
Thenpennai River Pollution Creates Tension | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆறு அந்த பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதனை நம்பி ஏராளமான விவசாயிகள், விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆற்றில் ரசாயன நுரைகள் பொங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, ஜூன் 14 : கிருஷ்ணகிரி (Krishnagiri) தென்பெண்ணை ஆற்றில் (Thenpennai River) திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அதிகப்படியான ரசாயன நுரைகள் (Chemical Foam) காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் உண்டாகும் ரசாயான நுரை, காற்றில் பறந்து சுற்றுப்புற பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள தென்பெண்ணை ஆறு
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு அமைந்துள்ளது. இது கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக, அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த ஆற்றையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை தனது முழு கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 40.76 அடி உயர்ந்து அதிகப்படியான நீர் இருப்பை உள்ளது. இதன் காரணமாக அந்த அணையில் இருந்து ஐந்து மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றுக்கு வினாடிக்கு 981 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.
தென்பெண்ணை ஆற்றில் பொங்கும் ரசாயன நுரை – விவசாயிகள் வேதனை
ஆனால், தந்தி செய்தியின் அடிப்படையில் தென்பெண்ணை ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் மிகவும் அசுத்தமாகவும் ரசாயன நுரை படிந்தும் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அதிகப்படியான ரசாயன நுரைகள் காணப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு ரசாயன நுரைகள் காணப்படுவது சுற்றுசூழல் மற்றும் தண்ணீரின் தரத்தை பாதிக்கும் என்றும், இதனால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.