குறைந்தது மழை … இனி வெளியில் கொளுத்துமா? வெளியான வானிலை அறிவிப்பு
Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை தற்போது குறைந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரம் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 2: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இருந்த கனமழை குறைந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று காரணமாக சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை ஏற்படும். 2025 ஜூன் 2 முதல் 5 வரை கடலோரப் பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளிலும் இது தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 1-2 செ.மீ மழை பதிவாகி, வேலூரில் 37.7°C அதிகபட்ச வெப்பநிலையாகவும், கரூர் பரமத்தியில் 22°C குறைந்தபட்சமாகவும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த கனமழை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தற்போது அந்த மழை தாக்கம் குறைந்துள்ளதாகவும், அடுத்த ஒரு வாரம் லேசானது முதல் மிதமான அளவிலான மழைதான் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபடுவதால், 2025 ஜூன் 2 தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 2025 ஜூன் 3 முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மட்டும் மழை நீடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை (ஜூன் 2):
வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை ஏற்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29°C ஆக இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
2025 ஜூன் 2 முதல் 5ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 1, 2025
வங்கக்கடல் பகுதிகள்:
மத்திய தெற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று முதல் ஜூன் 5 வரை, 40-50 கி.மீ வேகத்தில், இடையே 60 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசும். அதனை ஒட்டிய ஆந்திரப் பகுதிகளிலும் இதே நிலை காணப்படும்.
அரபிக்கடல் பகுதிகள்:
தென்மேற்கு, மத்தியமேற்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 5 வரை 45-55 கி.மீ வேகத்தில், இடையே 65 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசும். இதுவே மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் உண்டு.
கடந்த 24 மணி நேர நிலவரம்:
தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் பகுதிகளில் 1-2 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்சமாக வேலூரில் 37.7°C மற்றும் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.