சாத்தன்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.. தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு..
Sathankulam father-son murder case Verdict: சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோப்புப் புகைப்படம்
மதுரை, மார்ச் 23: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த மாநிலமே காத்திருக்கும் நிலையில், தீர்ப்பு மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே சிதையில் 2 உடல்கள்? அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் – என்ன நடந்தது?
வழக்கு பின்னணி.. என்ன நடந்தது?
கடந்த 2020-ம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்தது. அப்போது சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது 188, 269, 294(b), 353, 506(ii) ஆகிய 5 ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு (வழக்கு எண்: 312/2020) பதிவு செய்யப்பட்டது.
சிறையில் நேர்ந்த துயரம்:
விசாரணைக்குப் பிறகு இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலால், இருவரும் பலத்த காயமடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 23, 2020 அன்று 5 மணி நேர இடைவெளியில் தந்தை மற்றும் மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
5 ஆண்டுகால சட்டப் போராட்டம்:
இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. விசாரணையின் அடிப்படையில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையும் படிக்க: கட்டு கட்டாக பணம்.. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஐடி பெண் தலை துண்டாகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!
இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு:
இந்த வழக்கில் சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் வழக்கின் போக்கை மாற்றும் மிக முக்கியமான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.