கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
Rising Murders, Drug Abuse: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி கவலை அதிகரித்துள்ளது. தோட்ட வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் குறிவைத்து நடைபெறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களும் மேற்கு மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
வட தமிழகம், தென் தமிழகம், மேற்கு தமிழகம் என மாநிலத்தின் நிலவியலுக்கு ஏற்றாற்போல, சாதிய ரீதியிலோ, கொள்ளை கும்பலாலோ, அரசியல் அல்லது உறவு சார்ந்த சிக்கல்களாலோ தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன. தென் மாவட்டங்களில் மட்டும் கடந்த 2 மாதத்தில் 30 கொலைகள் நடந்துள்ளன. சாதிய மற்றும் ஆணவக்கொலைகள் கணக்கே இல்லாமல் அரங்கேறுகின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசவே தேவையில்லை. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்தியாவிலே முற்போக்கு மாநிலமாகவும், பெண் சுதந்திரம் மற்றும் தெளிவான அரசியலை முன்னெடுக்க கூடிய ஆளுமைகள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் தான் இத்தனை கொலைகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து அரங்கேறுகின்றன.
மாவட்ட வாரியாக மாறும் கொலைகள்
தமிழகத்தில் நடக்கும் கொலைகளை நிலவியல் வகையில் பிரிக்கலாம். தென் மாவட்டங்களில் அதிகரித்துள்ள சாதிய கொலைகள், மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் தோட்டத்து கொலைகள், வட மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் நடக்கக்கூடிய மாஃபியா கொலைகள், இரு தரப்பு மோதல்கள், சொத்து பிரச்சனைகள், கூலிப்படை ஏவல்கள், அரசியல் மற்றும் உறவு, முன்பகை சம்பந்தப்பட்ட கொலைகள் என பல்வேறு வகைகளில் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய மோதல்கள்
சுதந்திர இந்தியாவின் இன்றளவும் நிலவும் மிகவும் மோசமான ஒரு நடைமுறை சாதிய நடைமுறை. பிறப்பால் சக மனிதரை வேறுபடுத்தி பார்ப்பதோடு அந்த வெறுப்பின் உச்சம் கொலை வரைக்கும் செல்லக்கூடிய அவலம் மலிந்ததாக இச்சமூகம் காணப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 1990 -களில் தீவிரமெடுக்க துவங்கிய சாதிய மோதல்கள் இன்றளவும் குறையாமல் இருக்கின்றன. வேங்கைவயல் விவகாரம், நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீதும் அவர் தங்கை மீதும் சக மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல், கவின் ஆணவப்படுகொலை, சில வாரங்களுக்கு முன்பு நடந்த நாங்குநேரி இரட்டை கொலை, இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஆகாஷ் காவல் விசாரணை மரணம் என தென் மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
Also Read: மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கோரும் அமைப்புகள்
‘தாமதமாக வழங்கப்படும் நீதி … நீர்த்துப்போன நீதி’ என்பார்கள் ஆனால் நீதியே கிடைக்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே, பல பரிணாமங்களில் ஒரு மக்கள் கூட்டம் கொல்லப்படுகிறது. பட்டியல் சமூக மாணவர்கள் உயர்கல்வியில் முன்னேறியபோதும் ஆணவ கொலை செய்யப்டுகின்றனர். தமிழகத்தில் ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன, மேலும் நாங்குநேரி விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அறிக்கை பரிசீலனையில்தான் உள்ளது. இங்கே இருக்கக்கூடிய அமைப்புகள், அரசியல் சாரா இயக்கங்களின் போராட்டங்கள் ஏன் பலன் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
தோட்ட வீடுகளை குறிவைக்கும் மர்ம கும்பல்கள்
இது ஒருபுறம் இருக்க கடந்த 2022 -ஆம் ஆண்டிலிருந்து, ஈரோடு, கோயம்புத்தூர்,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தை காவல் காத்துக்கொண்டு வாழும் முதியவர்களை கொன்று அவர்களின் நகை பணத்தை சில மர்ம கும்பல் சூறையாடி செல்கின்றன. இன்னும் சில வழக்குகளில் மூதாட்டிகள் பாலியல் வன்கொடுமைக்கு கூட ஆளாகின்றன. நவம்பர் 2024 திருப்பூர் செம்மலை கவுண்டம்பாளையம் பகுதியில், கணவன், மனைவி, மகன் என குடும்பமே கொல்லப்பட்டு அவர்களின் உடமைகள் திருடப்பட்டன. மே 2025 ஈரோடு விளாங்காட்டு பகுதியில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு அவர்களின் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மார்ச் 2021 இல் ஓசூர் ஒன்னல்வாடி பகுதியில் தம்பதி கொல்லப்பட்டு அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. பிப்ரவரி 2026 சென்னை புரசைவாக்கம் அப்பாஸ் தெருவில் 61 வயதான பாலகிருஷ்ணன் கொல்லப்பட்டார். நேற்று 2026 மார்ச் 09 கிருஷ்ணகிரி, ஊத்தாங்கரை பகுதியில் 60 வயதான மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரது கணவர் அடித்தே கொல்லப்பட்டு உள்ளார்.
பெருகும் போதைப்பொருள் பழக்கம்
இதற்கிடையில் மணல் மாஃபியா, கட்டப்பஞ்சாயத்து, திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் கொலைகள், சொத்து பிரச்சனைகளால் ஏற்படும் கொலைகள் என மாநிலம் முழுக்க சட்ட ஒழுங்கு- மாநில பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
உளவு அமைப்புகள் மீது எழும் கேள்விகள்
தமிழகத்தின் உளவு அமைப்புகள் என்ன செய்கின்றன? அரசு எந்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கக்கூடிய உளவு அமைப்பின் தோல்வியாகவே இந்த சம்பவங்கள் காண்பிக்கிறது. முன்பெல்லாம் தமிழகத்தின் டீ கடைகளில் எல்லாம் உளவுத்துறையின் நடமாட்டம் இருக்கும். ஆனால் சமகாலத்தில் உளவு அமைப்புகள் ஆக்டிவாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.