‘உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம்’ – ராமதாஸ் ஆவேசம்

Vanniyar Youth Fest: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவிடந்தையில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழாவில், 10.5% இடஒதுக்கீடு வழங்காவிட்டால் கடும் போராட்டம் என ராமதாஸ் எச்சரித்தார். கட்சியில் செயலற்றவர்கள் நீக்கப்படுவர் என்றும், உழைப்பாளர்களுக்கு மட்டுமே சீட் எனவும் அறிவித்தார். அன்புமணி, இடஒதுக்கீடு சர்வே அவசியம் என வலியுறுத்தி, திமுகவின் செயல்பாட்டை விமர்சித்தார்.

உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம் – ராமதாஸ் ஆவேசம்

வன்னியர் இளைஞர் பெருவிழா

Updated On: 

12 May 2025 08:04 AM

செங்கல்பட்டு மே 12: பாட்டாளி மக்கள் கட்சி (Patali Makkal Katchi) சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சித்திரை முழுநிலவையொட்டி வன்னியர் இளைஞர் பெருவிழா (Vanniyar Youth Festival) பெருமிதத்துடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட தொண்டர்களுக்காக 100 ஏக்கரில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு, 1.80 லட்சம் இருக்கைகள், பலத்த எல்.இ.டி. திரைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்ற டாக்டர் ராமதாஸ், 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். கட்சிக்குள் பொறுப்பில் உள்ளவர்கள் செயலிழந்தால், பதவியிலிருந்து நீக்கப்படும் என்றும், உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அன்புமணி ராமதாஸ், சமூகங்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான சர்வே அவசியம் என வலியுறுத்தி, திமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு நன்மை செய்யவில்லை என விமர்சித்தார்.

திருவிடந்தையில் பா.ம.க. சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) சார்பில் “வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” மே 11, 2025 மாலை தொடங்கியது. இந்தப் பெருவிழாவை முன்னிட்டு, 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மாநாட்டு திடல் தயார் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட தொண்டர்கள்

மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் திரளாக வந்துள்ளனர். அவர்களுக்காக 1.80 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப 25-க்கும் மேற்பட்ட இடங்களில் 40×20 அளவிலான எல்.இ.டி திரைகள் மற்றும் மூன்று இடங்களில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டன.

இடஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

மாநாட்டில் பங்கேற்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உரையாற்றியபோது, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காதால், இதுவரை இல்லாதவகையில் பெரிய போராட்டத்தை நடத்துகிறோம். எவ்வளவு தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

தொகுதிகளில் வெற்றி பெறும் வழியை அவர் தெளிவாக விளக்கினார். “ஒவ்வொரு தொகுதியிலும் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் தலா 100 வாக்குகளை கொண்டுவந்தால் நிச்சயம் வெற்றி நம்முடையதே. 50 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால், உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது தெரிகிறது. இனி அது சகிப்பதற்குரியது அல்ல. கட்சிக்காக உழைப்பவர்களுக்கே சீட் கிடைக்கும்,” என்றார்.

“தூக்கி கடலில் வீசிவிடுவேன்!” – கட்சி தாராள ஒழுக்கத்தை எதிர்த்த ராமதாஸ்

ராமதாஸ் உரையில் கட்சிக்குள் பொறுப்புள்ளவர்கள் செயலில் ஈடுபடவில்லை என்றால், பதவியை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். “உண்மையாக உழைக்காத எம்எல்ஏவாக இருந்தாலும் தூக்கி கடலில் வீசிவிடுவேன். பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்திருக்கிறார்கள். நீ காலை வாரிக்கொண்டிருந்தால் பதவி நீங்கும். இந்தக் கட்சி தனிப்பட்டவர் சொத்து அல்ல,” எனக் கூறினார்.

இடஒதுக்கீடு சர்வே அவசியம் – அன்புமணி வலியுறுத்தல்

மாநாட்டில் பங்கேற்ற பா.ம.க. தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், இட ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்தார். “377 சமுதாயங்களில் 114 சமுதாயங்கள் மட்டுமே இடஒதுக்கீட்டால் பயன் பெறுகின்றன. எஸ்.சி.யில் 76 உட்பிரிவுகள், எஸ்.டி.யில் 34 உட்பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளுக்குள் யாருக்கு குறைவான வாய்ப்பு கிடைக்கிறது என்பதை சர்வே மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். அதனால்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்றார்.

வன்னியர் சமுதாயத்துக்கு மாறுபட்ட நடத்தை

“திமுக அரசுக்கு வன்னியர் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க மனமில்லை. 1957, 1962, 1967 தேர்தல்களில் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகளின் ஆதரவால் திமுக ஆட்சிக்கு வந்தது. இன்று அந்த சமுதாயத்தையே புறக்கணிக்கிறது. 23 வன்னியர் எம்எல்ஏக்கள் திமுகவில் உள்ளனர். ஆனாலும் சமுதாய வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இது வன்னியர்களுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டுக்கே துரோகம்,” என அன்புமணி கூறினார்.