பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. மதிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம்.. துரை வைகோ வருத்தம்!

Journalist Attacked at MDMK Event : விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைகோ கலந்து கொண்ட மதிமுக கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. மதிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம்..  துரை வைகோ வருத்தம்!

வைகோ

Updated On: 

10 Jul 2025 21:38 PM

சென்னை, ஜூலை 10 : விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் (Journalist Attacked at MDMK Event) மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ  (Durai Vaiko) வருத்தம் தெரிவித்துள்ளார். 2025 ஜூலை 9ஆம் தேதி சாத்தூரில் மதிமுக பொதுக் கூட்டம் (Sattur MDMK Event) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (Vaiko) உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, மேடையில் துரை வைகோ உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது, செய்தி கேரிப்பதற்காக பத்திரிகையாளர்களும் அங்கு இருந்துள்ளனர். அப்போது, நாற்காலிகள் காலியாக இருப்பதை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உணவுக்காக சிலர் சென்ற நேரத்தில், இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, காலியான நாற்காலிகளை புகைப்படம் எடுத்ததாக பத்திரிகையாளர்களை நோக்கி வைகோ ஆவேசமாக பேசியதாக தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

“நீங்கள் காலி நாற்காலிகளை ஏன் புகைப்படம் எடுக்குறீர்கள்? வெளியே காத்திருக்கும் ஆயிரம் பேரின் படங்களை ஏன் நீங்கள் எடுக்கக்கூடாது? அவர்களின் கேமராவைப் பிடுங்கி படத்தை எறியுங்கள்” என வைகோ கூறினார். இதனை அடுத்து, மதிமுக தொண்டர்கள் பத்திரியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், பத்திரிகையாளர்கள் சிலரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பத்திரிகையாளர்களை தாக்கவில்லை என மதிமுக நிர்வாகிகள் கூறினர்.  இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தது.

Also Read : மதிமுகவில் மீண்டும் முற்றிய மோதல்.. வைகோ சொல்லும் முக்கிய விஷயங்கள்.. என்ன நடக்கிறது?

வைகோவுக்கு கண்டனம்


தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். வைகோவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “பத்திரிகையாளர் மீது வைகோ கட்சியினர் அவிழ்த்து விட்டு இருக்கின்ற வன்முறை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பொது இடங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமான அனைவர் மீதும் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.

Also Read : அ.தி.மு.க திராவிட கட்சி அல்ல, அந்தக்காலம் மலையேறி போச்சு‌: செல்வப்பெருந்தகை

துரை வைகோ வருத்தம்

இந்த நிலையில், மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த துரை வைகோ, “வைகோ பத்திரிகையாளர்களுடன் நல்லுறவைப் பேணி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமென்றால், பத்திரிகை சுதந்திரம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். சாத்தூரில் நடந்த சம்பவத்திற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பாகவும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.