கிரானைட் கும்பலுக்கு சிக்கல்… காணொலியில் இன்று சாட்சி சொல்லும் சகாயம்..!
Madurai Granite Scam: மதுரை மேலூர் கிரானைட் சட்டவிரோத வெட்டுதல் தொடர்பான வழக்கில், ஓய்வு பெற்ற IAS அதிகாரி சகாயம் முக்கிய சாட்சியாக உள்ளார். அவரது அறிக்கையில், அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2025 ஜூன் 6 அன்று வீடியோ மூலம் சாட்சியம் அளிக்கிறார்.

சென்னை ஜூன் 06: மதுரை மாவட்டம் மேலூரில் (Madurai) கிரானைட் (Granite) கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தது தொடர்பான வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளன. இதில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமர்ப்பித்த அறிக்கையில், அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. நேரில் ஆஜராக பாதுகாப்பு இல்லாததால், காணொலி மூலம் சாட்சியம் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2025 ஜூன் 06 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து காணொலி வழியாக சாட்சியம் அளிக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கிரானைட் முறைகேடு வழக்கு
மதுரை மாவட்டம் மேலூரில் பல கிராமங்களில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து ஏராளமான கிரானைட் நிறுவனங்கள் அரசு விதிகளை மீறி இயங்கியதாக 2012-ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. கிரானைட் நிறுவனங்கள் தொடர்ந்து பனியூர், கீழக்குண்டு, நாயனக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில், சட்டப்படி சுரங்க உத்தரவு இல்லாமல், அதிக அளவில் கிரானைட் கற்களை வெட்டி ஏற்றுமதி செய்து அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
600 பக்க விசாரணை அறிக்கை
இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியாக பணியாற்றிய உ.சகாயம், விசாரணைக்கு நியமிக்கபட்டார். அவர் அளித்த 600 பக்க விசாரணை அறிக்கையில், சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் நிறுவனங்கள் மூலம் அரசு கட்டாயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழந்ததாக தெரிவித்தார். பல உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் நபர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
வழக்குகளில் முக்கிய சாட்சியாக சகாயம் சேர்ப்பு
இந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கிரிமினல் மற்றும் சிபிசிஐடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் சில வழக்குகள் தற்போது மதுரையில் உள்ள கனிம குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளன. இந்த வழக்குகளில் முக்கிய சாட்சியாக சகாயம் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாட்சியளிக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கிரானைட் அகழ்வில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான முறைகேடு தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இன்று (ஜூன் 6) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்கிறார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்போது தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்ததால், நேரில் வர முடியவில்லை என அவர் தெரிவித்தார். தற்போது அவரது சாட்சியம் வீடியோ காட்சி மூலம் பெறுவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஜூன் 06 இன்று காலை அவர் காணொலி மூலம் சாட்சியம் அளிக்கவுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.