EMU Scam: ஈமு கோழி மோசடி.. சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!
ஈரோட்டில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குருசாமி மீது பதியப்பட்ட ஈமு கோழி மோசடி வழக்கில், கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹7.89 கோடி அபராதம் விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த மோசடியில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர், ஜூன் 6: ஈரோட்டில் (Erode) சுசி நிறுவனம் என்ற பெயரில் ஈமு கோழி மோசடியில் (EMU Scam) ஈடுபட்ட அந்நிறுவனத்தின் உரிமையாளர் குருசாமி மீது பதியப்பட்ட வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது. கொங்கு மண்டலத்தை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த ஈமு கோழி வளர்ப்பது தொடர்பான விளம்பரத்தில் முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர்.
கவர்ச்சி விளம்பரம்
இதனிடையே ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ரூபாய் 1.50 லட்சம் முதலீடு செய்தால் ஆறு ஈமு கோழிகள் அதற்கான தீவனம் மற்றும் தங்குவதற்கான கொட்டகை ஆகியவை அமைத்து தரப்படும் எனவும், இதற்காக பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் இரண்டு ஆண்டுக்கு வழங்குவதுடன், ரூ.20,000 போனஸ் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய பணம் மீண்டும் திரும்பி தரப்படும் என கவர்ச்சிகரமாக விளம்பரம் பார்த்து தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குருசாமியிடம் முதலீடு செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த தொழிலில் முதலீடு செய்த நிலையில், அனைத்து பணத்தையும் பெற்றுக் கொண்ட குருசாமி சொன்னபடி செய்யாமல் மோசடி செய்தார். இதுதொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் குருசாமி மீது பதிவு செய்யப்பட்டது. இதில் சேலத்தில் பதியப்பட்ட வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கானது கோவை மாவட்டத்தில் முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் ஈமு கோழி மோசடி செய்த உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே சமயம் அபராதமாக ரூபாய் 7.89 கோடி பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையினை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2025 ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு வழக்கில் குருசாமிக்கு பத்தாண்டுகள் சிறையும், ரூ.19 கோடி அபராதமும் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.