சிலிண்டர் விலை – முன்பும் இப்போதும்.. விலை மாற்றம் ஏன்?

LPG and Home Cylinder Price Hiked: எல்பிஜி வீட்டு சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ.60 உயர்ந்தது. தமிழ்நாட்டில் புதிய விலை ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 2026 மார்ச் 07 இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

சிலிண்டர் விலை – முன்பும் இப்போதும்..  விலை மாற்றம் ஏன்?

கேஸ் சிலிண்டர்

Published: 

07 Mar 2026 10:24 AM

 IST

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருந்த நிலையில், தற்போது திடீரென உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டர் முன்பு ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த விலை ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சிலிண்டருக்கு ரூ.60 கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் முன்பு ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் ரூ.114.50 முதல் ரூ.115 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

நள்ளிரவில் திடீர் விலை உயர்வு

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவில் திடீரென உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததால் இல்லத்தரசிகள் மற்றும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சர்வதேச காரணங்கள்

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச்சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக உலகளவில் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலைமையின் தாக்கம் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலையிலும் பிரதிபலித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு

மத்திய அரசின் விளக்கம்

எனினும், நாட்டில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் 8 வாரங்களுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிலிருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் புதிய விலை

புதிய விலை உயர்வின் அடிப்படையில் சென்னை நகரில் வீட்டு சிலிண்டர் ரூ.928.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் வீட்டு சிலிண்டர் ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.930 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலையும் இதேபோல் அனைத்து முக்கிய நகரங்களிலும் ரூ.110க்கும் மேல் உயர்ந்துள்ளது.

மக்களுக்கும் வணிகத்துறைக்கும் தாக்கம்

இந்த விலை உயர்வு காரணமாக வீட்டு நுகர்வோரின் மாதச்செலவு மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் அதிக தாக்கத்தை சந்திக்கக்கூடும். சில இடங்களில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் சிலிண்டர் பதிவு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சில பகுதிகளில் 21 நாட்கள் இடைவெளி விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பட்ட சர்ச்சை

கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விலை உயர்வு அன்றாட வாழ்க்கை செலவினங்களை மேலும் அதிகரிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி