வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை.. நாளை முதல் தொடக்கம் என அறிவிப்பு..
சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 5ஆம் தேதி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க், அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட மூன்று பறக்கும் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 13, 2026: சென்னை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த வேளச்சேரி–பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் நாளை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை கடந்த வாரம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அது தள்ளிப்போனது. சென்னையைப் பொறுத்தவரை மின்சார ரயில் சேவையை நம்பி தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் வரை பல்வேறு பாதைகளில் தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த மின்சார ரயில் சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை:
பல ஆண்டுகளாக வேளச்சேரி–பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அது இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டதுடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையராலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின் போது சில தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக சேவை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து தொழில்நுட்ப பணிகளும் சோதனை ஓட்டங்களும் நிறைவடைந்துள்ளதால் வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதல்முறையாக.. கேஸ் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..
தொழில்நுட்ப சிக்கல்:
சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 5ஆம் தேதி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க், அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட மூன்று பறக்கும் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதால் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்:
தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் பரங்கிமலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் காத்திருப்பு நிறைவேறியுள்ளது.
மேலும், இந்த சேவையின் மூலம் பரங்கிமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை ஒரே ரயிலில் நேரடியாக பயணம் செய்யும் வசதியும் ஏற்படுகிறது.