ரூ.80 லட்சத்திற்கு மேல் சொத்து வரி பாக்கி.. ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சீல் வைப்பு..
Jayalalithaa's House Seized: தற்போது அமலில் உள்ள 'ஒரே முறை தீர்வுத் திட்டத்தின்' கீழ் (மார்ச் 31 வரை செல்லுபடியாகும்), சலுகைகள் போக மொத்தம் ரூ.82,91,822 வரி நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்பு இந்தக் கட்டிடத்தில் தனியார் அலுவலகம் இயங்கி வந்ததால், வணிக ரீதியான சொத்து வரி விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெயலலிதா
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த தலைவருமான ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தை மாநகராட்சி (GHMC) அதிகாரிகள், திங்கள்கிழமை அன்று சீல் வைத்தனர். சொத்து வரி நிலுவையில் இருந்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது ரூ.900 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பாக நீண்ட சட்டப் போராட்டங்கள் நடந்தன.
இதையும் படிக்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறல்.. தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள்:
இதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரை அவரது நேரடி சட்டப்பூர்வ வாரிசுகளாக சென்னை உயர்நீதிமன்றம் 2020ல் அறிவித்தது. இதன் மூலம் போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட சொத்துக்கள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேசமயம், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் தற்போது தமிழக அரசின் வசம் உள்ளன.
ரூ.20 கோடிக்கும் மேல் வரி பாக்கி:
இந்நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.20 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இந்த வரியைச் செலுத்தத் தவறினால், போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை ஏலம் விடப்போவதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் (பிப்ரவரி 2026) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சொத்துகளுக்கே இந்த நிலை என்றால், அவரது வெளிமாநில சொத்துகள் நிலை இன்னும் பராமரிப்பின்றி உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள 5 அடுக்கு வீடு:
அந்தவகையில், ஹைதராபாத் நகரின் யூசுப்குடா ஜி.எச்.எம்.சி மண்டலம்-38க்கு உட்பட்ட ஸ்ரீநகர் காலனியில் ஜெயலலிதாவின் பெயரில் G+4 (ஐந்து அடுக்குகள்) கொண்ட கட்டிடம் (கதவு எண்: 8-3-1099/A, PTIN எண்: 1100833474) உள்ளது. இந்த கட்டிடத்திற்கான சொத்து வரி 2017-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
வீட்டிற்கு சீல் வைப்பு:
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் துணை ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் சொத்துக்களை கவனிப்பவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இருப்பினும், அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வராததால், ஜி.எச்.எம்.சி வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் அந்த கட்டிடம் திங்கள்கிழமை (மார்ச் 30) சீல் வைக்கப்பட்டது.
நிலுவைத் தொகை எவ்வளவு?
தற்போது அமலில் உள்ள ‘ஒரே முறை தீர்வுத் திட்டத்தின்’ (OTS) கீழ் (மார்ச் 31 வரை செல்லுபடியாகும்), சலுகைகள் போக மொத்தம் ரூ.82,91,822 வரி நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்பு இந்தக் கட்டிடத்தில் தனியார் அலுவலகம் இயங்கி வந்ததால், வணிக ரீதியான (Commercial) சொத்து வரி விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 2017 முதல் இது குடியிருப்புக்காகப் பயன்படுத்தப்படுவதால், வரியைக் குறைக்கும் வகையில் அதனை ‘குடியிருப்புப் பகுதியாக’ (Residential) மாற்றக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் ஏற்கனவே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிக்க: 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எனினும், நிலுவையில் உள்ள வரியைச் செலுத்தும்படி பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு உரிய பதில் இல்லாததால், மாநகராட்சி ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.