திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. 3-ல் உதயசூரியன் சின்னம்..
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 11, 2026: வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணி:
அதில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் மதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு 37 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மதிமுகவிற்கு 4 இடங்கள்:
அதனைத் தொடர்ந்து மற்ற கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், மதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளது. அதன் முடிவில் மதிமுகவிற்கு நான்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இன்று தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி:
அதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று தொகுதிகளில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடவும், ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மீதமுள்ள ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜக தமிழகத்தில் நுழையக்கூடாது என்ற ஒற்றை நோக்கில் தான் நாங்கள் பயணித்து வருகிறோம். அதனால் தொகுதிகள் குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை” என தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் நான்கு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த முறை இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட்டு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.