வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த தித்வா, ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததால், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது.

கோப்புப்படம்
சென்னை, டிசம்பர் 03: வங்கக்கடலில் சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று, காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் நிலையில், படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், வானிலை ஆய்வு மையம், தனியார் ஆய்வாளர்கள் கணிப்புகளை தாண்டி, ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தங்கியதால், வட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த மிக கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
வானிலை ஆய்வு மையம் தகவல்:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்தது. தொடர்ந்து, சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறையக் கூடும். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும்.
3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:
மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, எண்ணூரில் 26 செ.மீ. பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..
வலுவிழக்கும் தித்வா புயல்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்-தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வந்தது. இது, புதுச்சேரிக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 80 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் வடதமிழகம்-புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. இது, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கவுள்ளது.