சென்னையில் குடிநீர் லாரிகள் இயக்கும் நேரத்தில் மாற்றம்.. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..
Metro Lorry Timing: சென்னை பெரம்பூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகள் இயக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை குடிநீர் லாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை குடிநீர் லாரிகள் இயங்கும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பீக் நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் குடிநீர் லாரிகள் தண்ணீர் வினியோகம் செய்யாத வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது லாரி ஏரி சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிர் இழந்த சம்பவம் நடந்தது. இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற சிறுமி சடன் பிரேக் அடித்ததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால் இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர் அந்த சிறுமி மீது லாரியை ஏற்றியுள்ளார். இதனால் அந்த சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்:
இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரையும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்த சென்னை காவல் ஆணையர் அருண் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
விபத்து நடத்தும் வாகனங்கள் 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது எனவும் காலை 7:00 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மீறி இந்த பகுதிகளில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் அப்பகுதி போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் லாரிகள் இயக்கும் நேரத்தில் மாற்றம்:
சென்னை காவல் ஆணையர் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்த நிலையில், தற்போது சென்னை குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 5:30 மணியில் இருந்து குடிநீர் லாரிகள் இயக்கப்படும். ஆனால் தற்போது இந்த புதிய விதிமுறையின் படி காலை 4.30 மணிக்கு குடிநீர் லாரிகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாலை 4:30 மணி முதல் காலை 7.30 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதன் பிறகு 7.30 மணியிலிருந்து9.30 மணி வரை விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9:30 மணிக்கு பிறகு வழக்கமான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் மாற்று வழியில் லாரிகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.