ஞானசேகரன் குற்றவாளி.. ஜூன் 2ல் தண்டனை விவரம்.. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!
Anna University Harassment Case : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் 2025 ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான ஞானசேரகன், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, மே 28 : சென்னை அண்ணா பல்கலைக்கழக (Anna University Harassment case Verdict) மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2024 டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில், ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என சென்ன மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை விவரம் 2025 ஜூன் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி அறிவித்துள்ளார். தண்டனை விவரம் வெளியாகும் வரை, ஞானசேகரனுக்கு நீதிமன்றம் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச தண்டனை வழங்க கோரிக்கை
2025 மே 28ஆம் தேதியான இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான ஞானசேகரன், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் பேசுகையில், ” என் அப்பா இறந்துவிட்டார். அதிக கடன் உள்ளது. அம்மா, சகோதரி, மகளை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, தண்டனை விவரங்களை 2025 ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், தனது சக மாணவருடன் 2024 டிசம்பர் 25ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து இரவில் பேசிக் கொண்டிருந்தார்.




அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த மாணவனை கொடூரமாக தாக்கிவிட்டு, மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு அடுத்த நாள் காலை பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு குறித்து போலீசார் பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பவர்கள், சக மாணவர்கள், விடுதி மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதோடு, பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சம்பவம் நடந்த நேரத்தில், ஒருவர் பல்கலைக்கழகத்திற்குள் சென்றது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்ததில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரை பிடித்த போலீசார், மாணவியிடம் வீடியோ கால் மூலம் உறுதிப்படுத்தினர்.
இதனை அடுத்து, ஞானசேகரன் மீது பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் பிரிவுகள் 329, 126(2), 87, 127(2), 75(2) உடன் 75(i), (ii), (iii), 76, 64(1), 351(3), 238(b) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை தானாக முன்வந்த விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, இந்த வழக்கை விசாரித்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு கைதான ஞானசேகரனிடம் விசாரணையை மேற்கொண்டு, அவரிடம் வாக்குமூலத்தை பெற்றது. அதைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி மாதம் விசாரணை குழு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள், 20 சாட்சியங்களை சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்ததது. இப்படி பல கட்ட விசாரணைக்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.