வானிலை நிலவரம், ஏப்ரல் 29, 2026: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிலோமீட்டர் உயரத்தில் வடபகுதி கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தென் கர்நாடகா வழியாக தமிழகம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 29ஆம் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?
ஏப்ரல் 30ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகலாம்.
மே 2ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 3ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயில்:
மே 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி நகரில் 40.5°C பதிவாகியுள்ளது. தொடர்ந்து வேலூர் – 39.7°C, மதுரை – 39°C, கரூர் – 39.2°C, ஈரோடு – 39.6°C, திருத்தணி – 38.2°C, திருப்பத்தூர் – 38.6°C, நாமக்கல் – 38.3°C மற்றும் தர்மபுரி – 38.7°C என பதிவாகியுள்ளது.
சென்னை நகரில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.1°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2°C பதிவாகியுள்ளது.
அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை:
வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தில் சில இடங்களில் “அசௌகரியம்” (Heat discomfort) ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39°C அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C அளவிலும் இருக்கக்கூடும். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக ஈரப்பதத்தால் அசௌகரியமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.