AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Sani Peyarchi Festival 2026: திருநள்ளாற்றில் 2026 மார்ச் 6 அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Mar 2026 12:03 PM IST

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று 2026 மார்ச் 6 சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர சனி கிரகம் சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 2026 மார்ச் 6 இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தரிசிக்க தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாற்றில் திரண்டனர்.

சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

இந்த தலத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அபய முத்திரையுடன் கிழக்கு நோக்கி அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சனிப்பெயர்ச்சி நாளை முன்னிட்டு சனிபகவானுக்கு விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. நல்லெண்ணெய், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க அங்கியுடன் சுவாமி அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு திரண்டனர். தோஷ நிவர்த்திக்காக நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடிய பின்னர் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் ஒரு மைல் தூரம் வரை நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்ய கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1000 என சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் வசதி ஏற்பாடுகள்

பெரிய அளவில் பக்தர்கள் வருகை தரும் நிலையில் கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருநள்ளாறு முழுவதும் சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு தலத்தின் ஆன்மிக முக்கியத்துவம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரக தலங்களில் சனி பகவானுக்கான முக்கிய ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி தோஷ நிவர்த்தி பெறும் பரிகாரத் தலமாகவும் இது புகழ்பெற்றுள்ளது. தேவார மூவரான அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் பாடல் பெற்ற புனித தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. நளச்சக்கரவர்த்தி சனி தோஷத்திலிருந்து விடுபட்ட தலமாகவும் இந்த தலம் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

Follow Us