AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில் தெரியுமா?

ஈரோடு மாவட்ட ஊத்துக்குளியில் உள்ள கதித்த மலையில் அமைந்துள்ள வெற்றி வேலாயுதசுவாமி கோயில், அகத்திய முனிவர் தொடர்புடைய புராணச் சிறப்புமிக்கது. முருகனின் அருளால் உருவான ஊற்று இங்கு உள்ளது. வள்ளி, தெய்வானை சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில் தெரியுமா?
வெற்றி வேலாயுத சுவாமி கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Jun 2025 19:13 PM IST

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் அருள்பாலிப்பான் என்பது சான்றோர் வாக்காகும். ஒவ்வொரு ஊரிலும் முருகன் ஏதேனும் ஒரு குன்று அல்லது மலை மீது இன்றைக்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறான். இந்த கோயில், அந்த கோயில் என்றெல்லாம் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஆன்மிக அன்பர்கள் அவன் மீது அளவு கடந்த அன்பு, பக்தி கொண்டுள்ளனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் குன்றின் மீது அமைந்திருக்கும் வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது அங்குள்ள ஊத்துக்குளியில் இருக்கும் கதித்த மலை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலானது தினந்தோறும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணி வரையும், மாலை நேரத்தில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி காணலாம்.

கோயில் உருவான வரலாறு

அகத்திய முனிவர் முருகன் கோயில் கொண்டிருக்கும் அனைத்து இடங்களுக்கும் தரிசிக்க சென்றார். அப்போது அவருடன் நாரதர் மற்றும் தேவர்கள் உடன் சென்றனர். இப்படியான நிலையில் ஓரிடத்தில் பூஜைக்குரிய நேரம் வந்த நிலையில் அகத்தியர் முருகனுக்கு பூஜை செய்ய நீரின்றி தவித்தார். அந்த நேரம் அவருக்கு தாகமும் ஏற்பட்ட நிலையில் முருகப்பெருமானை நினைத்து மனம் உருகி வேண்டினார். அதில் நெகிழ்ச்சி அடைந்த முருகன் அகத்திய முனிவர் முன் தோன்றி தனது வேலால் தரையில் குத்தி ஊற்று நீரை பெருக்கெடுக்க செய்தார்.

இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அகத்தியர் மன நிறைவாக தனது பூஜையை செய்து முடித்ததோடு மட்டுமல்லாமல் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். அப்படி அன்று முருகனால் ஏற்படுத்தப்பட்ட அந்த ஊற்று இன்று வரை வற்றாமல் நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் இந்த இடம் ஊத்துக்குளி என அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகப் பெருமானுக்கும் கோயில் கட்டப்பட்டது..

கோயிலின் சிறப்பு தகவல்கள்

கதித்த மலையில் இருக்கும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு மிகச் சிறப்பாக அருள் பாலித்து வருகிறார். அகத்தியர் பூஜை செய்த பெருமை கொண்ட இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுத சாமி தனியாக வள்ளி தெய்வானை இல்லாமல் அருள்பாலிக்கிறார். சூர பத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய பெண்கள் இந்த மலைக்கு வந்து தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளின் படி இந்திரனின் மகளான தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளான வள்ளியும் அவதரித்தனர்.

திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் இவர்களுக்கு தனி சன்னதி இங்கு தரப்பட்டுள்ளது. குன்றின் மீது ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு செல்வதற்கு அகலமான படிக்கட்டுகள் அமைந்துள்ளதால் அனைத்து வயதுனரும் தினமும் வந்து செல்கின்றனர். முருகனின் கண தலைவரான இடும்பனுக்கும் இக்கோயிலில் தனி சன்னதி உள்ளது. மேலும் முருகன் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமாக பாம்பு புற்று ஒன்று உள்ளது.

இதனை கோயிலாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதேபோல் வள்ளி, தெய்வானை சன்னதிக்கு செல்லும் பாதையில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. இங்கு வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆகியவை வெகு விமரிசியாக கொண்டாடப்படும்.

அது மட்டுமல்லாமல் திருமண தடை உள்ளவர்கள், கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பிரச்சினை தீரும் என்பது ஐதீகமாக உள்ளது வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை வந்து வழிபடுங்கள்.

(இணையத்தில் வெற்றி வேலாயுத சுவாமி கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us