Kallazhagar Vaigai Entry: கள்ளழகர் உடுத்தும் பட்டின் நிறம்.. என்ன அர்த்தம் தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 2025 மே 12 அன்று நடைபெற உள்ளது. கள்ளழகர் எந்த நிறப் பட்டு உடுத்தி வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பச்சை நிறம் செழிப்பையும், சிவப்பு நிறம் எதிர்பாராத நிகழ்வுகளையும் குறிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 2025, மே 12 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி இறங்கப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மிகப்பெரியதும், உலக அளவில் பிரபலமானதுமான மதுரை சித்திரை திருவிழா 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதுவரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் செல்லுதல், மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்படுதல் ஆகியவை நடைபெற்றுள்ளது. 20 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 025, மே 12 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்
அதாவது மதுரை மாநகரில் நடைபெறும் தனது தங்கை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் நடைபெறும் திருமணத்திற்காக கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி வருவார். ஆனால் வழியெங்கும் அவருக்கு பக்தர்கள் காட்சி கொடுப்பார்கள். அதனால் தாமதம் ஏற்பட அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடும். இதனால் கோபம் கொண்ட கள்ளழகர் மதுரைக்குள் வராமலேயே வைகை ஆற்றில் எழுந்தருளி தேனூர் மண்டபத்தில் மாமண்டூ முனிவரின் சாபம் தீர்த்து விட்டு மறுபடியும் அழகர் மலைக்கு திரும்பும் வைபவம் நடைபெறும்.
இதில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட வருகை தருவார்கள். அன்றைய தினம் வீட்டிலிருந்து புறப்பட்டால் மீண்டும் வீட்டிற்கே செல்ல தோன்றாத அளவுக்கு மக்கள் கூட்டமும், அழகரின் கண்கொள்ளாக் காட்சியும் நம்மை ஆட்கொள்ளும்.
அழகருக்கான பெட்டி
இப்படியான நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் சுந்தரராஜ பெருமாள் ஆக எழுந்தருள்வார். தங்க பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி உத்தரவு பெற்று அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி, நெற்றி பட்டை, கைகளில் வளைத்தடி, நேரி கம்பு மற்றும் மேள தாளங்கள் முழங்க வருகை தருவார்.
அவர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன் அவருக்கான ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் ஆகியவை ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப் புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமை அர்ச்சகர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார். எந்த வண்ண புடவை கையில் கிடைக்கிறதோ அதுவே அழகர் ஆற்றில் இறங்கும் தினம் அனுபவிக்கப்படும்.
எந்த வண்ணத்திற்கு என்ன அர்த்தம்?
கள்ளழகர் எந்த வண்ணப் பட்டு கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடம் உலகத்தில் நல்லது கெட்டது இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதன்படி அவர் பச்சை பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்றும், சிவப்பு பட்டு கட்டி வந்தால் இந்த ஆண்டு போதிய விளைச்சல் இருக்காது. மேலும் நாட்டில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும் எனவும் ஐதீகமாக உள்ளது.
வெள்ளை மற்றும் ஊதா நிறப் பட்டு கட்டி வந்தால் நல்லது மற்றும் கெட்ட நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட நிலை இருக்கும். அதே சமயம் மஞ்சள் பட்டு கட்டி வந்தால் அந்த ஆண்டு மங்களகரமான நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் என்பதை நம்பிக்கை ஆகும். அப்படியாக கடந்த சில ஆண்டுகளாகவே பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் 2025 ஆம் ஆண்டு கள்ளழகர் என்ன வண்ணத்தில் பட்டுக்கட்டி இறங்க போகிறார் என்பது பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.