Koomapatti: ட்ரெண்டாகும் கூமாப்பட்டி.. அந்த ஊர் எங்கிருக்கு தெரியுமா?
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கூமாப்பட்டி, தென் மாவட்டங்களில் ஒன்றில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாகும். பிளவாக்கல் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது அமைதியான இயற்கை எழிலை கொண்டது. இந்த கிராமத்தின் அழகு, சுற்றுலா பயணிகளை கவர ஆரம்பித்துள்ளது. இணையத்தில் கூமாபட்டி எங்குள்ளது என்பது ட்ரெண்டாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் விஷயங்களை காண முடிகிறது. சினிமா தொடங்கி சுற்றுலா வரை உலகின் எங்கெங்கு என்னென்ன உள்ளது என்பதை நொடி பொழுதில் நம்மால் பார்க்கவும் முடியும், ட்ரெண்ட் செய்யவும் முடியும், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யவும் முடிகிறது. இப்படியான நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே கூமாப்பட்டி வாங்க என்ற ஹேஷ்டேக் உடன் பதிவுகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படியான கூமாப்பட்டி எங்கு உள்ளது, அந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இடமாக கூமாப்பட்டி உள்ளது.
கூமாப்பட்டி எங்கு உள்ளது தெரியுமா?
View this post on Instagram
தமிழ்நாடு இயற்கை எழில் கொஞ்சம் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் நிறைந்த இடமாகும். இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அருவிகள், அணைகள், ஆறுகள், குளங்கள், கடல் போன்ற ஏதேனும் ஓர் நீர்நிலைகள் உள்ளது. இத்தகைய இடங்கள் உள்ளூர் மக்களால் நன்கு அறியப்பட்ட நிலையில் இணைய வசதி பெருகிவிட்டதால் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களும் அத்தகைய சுற்றுலா தளங்களை அறிந்துகொண்டு விடுமுறை நாட்களில் படையெடுத்து வருகின்றனர்.
இப்படியாக இணையத்தில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி விருதுநகர் மாவட்டம் வத்திரா குடியிருப்பு தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதியாகும். இதற்கு அருகில் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. இந்த கூமாப்பட்டி ஊருக்கு அருகில் பிளவாக்கல் அணையானது உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஊரானது சாத்தூர் தொகுதியில் வருகிறது. இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த இடம் பலருக்கும் தெரியாத ஒரு மறைமுக சுற்றுலா பகுதியாகும்.
இந்த அணையானது சுமார் 8000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டார மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த விழாக்கள் அணைக்கு அருகே ஒரு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது
ட்ரெண்டாகும் விஷயங்கள்
இயற்கை எழில் கொஞ்சும் இந்த அமைதியும் பசுமையும் நிறைந்த கூமாபட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், மன அழுத்தமா? , விடுமுறையை கொண்டாட வேண்டுமா?, கூமாபட்டிக்கு ட்ராவல் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறோம், கூமாபட்டிக்கு போகணும் போல இருக்கு என விதவிதமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே பிளவாக்கல் அணை பிரபல சுற்றுலாத் தலமாக தான் திகழ்கிறது. ஆனால் அதன் அருகில் இருக்கும் கூமாப்பட்டி ட்ரெண்டாவது மிகப்பெரிய விஷயமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் பலரும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.